• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சென்னையில் மஞ்சும்மல் பாய்ஸ் படம் பார்த்த எம்.எஸ்.டோனி

சினிமா

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. அன்றைய தினம் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

டோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கினார். இப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

இதனையடுத்து, மார்ச் 26-ந் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. இதனால் சென்னை அணி வீரர்கள் சென்னையில் ஊர் சுற்றி பொழுது போக்கினர்.

இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் கேப்டானான எம்.எஸ்.டோனி நேற்று இரவு மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்து ரசித்திருக்கிறார். பந்துவீச்சாளர் தீபக் சஹார் உடன் சென்று சென்னை சத்யம் திரையரங்கில் அவர் இப்படத்தை கண்டுகளித்துள்ளார். அப்போது படம் முடிந்து வெளியே வந்த டோனியை பார்த்ததும் ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மலையாள சினிமாவில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது. அது மட்டுமில்லாமல், தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ஐம்பது கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் தமிழில் பல முன்னணி ஹீரோக்கள் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை பார்த்து பாராட்டிய நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை திரையில் பார்த்துள்ளார்.
 

Leave a Reply