• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாலியின் பாடல் வரிகள்; பாடிய போதே அழுத எஸ். ஜானகி: எந்தப் பாட்டு தெரியுமா?

சினிமா

வரிகளால் மனதை உருக்கிய வாலி; இதயத்தை கனக்கச் செய்த இளையராஜா இசை; பாடுவதை மறந்து அழுத எஸ்.ஜானகி; எந்த பாடல் தெரியுமா?

மனதை உருக்கும் வாலியின் பாடல் வரிகளால் பாடும் போதே எஸ்.ஜானகி அழுதுள்ளார். இந்த பாடல் என்ன என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் தனக்கென்று தனி பாணியை வைத்திருந்தவர் வாலிபக் கவிஞர் வாலி. கண்ணதாசனுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் வாலி. அனைத்து வயதினருக்கும் ஏற்ற, அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்ற பாடல்களை இயற்றுவதில் வல்லவர் வாலி. காதல், தத்துவம், ஏக்கம், சோகம், காமம், குத்து பாட்டு என எந்த சூழ்நிலைக்கும் பாடல்களை இயற்றி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் வாலி.

இந்தநிலையில், தன் வரிகளால் ரசிகர்களை மயக்கும் வாலி, பாடல் ரெக்கார்டிங்கின்போது, பாடகி ஜானகியை பாட முடியாமல் அழச் செய்த சம்பவமும் நடந்துள்ளது. 1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அச்சாணி. காரைக்குடி நாராயணின் கதையில் உருவாகிய இந்த படத்தில் முத்துராமன், லட்சுமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை வாலி எழுதியிருந்தார்.

இந்தப் படத்தில் இடம்பெற்று மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாடல் ‘மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்’. இந்த பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்தார். அருமையான டியூன், சிறப்பான பாடல் வரிகள் அமைந்ததால் இளையராஜா தன் பங்கிற்கு இசைமூலம் இப்பாடலுக்கு உயிர் ஊட்டியிருந்தார். இயேசுவை பெறாமல் பெற்றதாயாக மேரி மாதா இருந்தது போல இந்த படத்தின் கதாநாயகிக்கு காட்சிகள் அமைக்கப்பட்டு, அந்த சூழலில் இந்த பாடல் இடம் பெறும்.

முன்னதாக இந்த பாடல் உருவான போது பல தடங்கல்கள் ஏற்பட்டது. பிரசாத் ஸ்டுடியோ பிஸியாக இருந்ததால் இளையராஜாவால் காலையில் இந்த பாடலை ஒலிப்பதிவு செய்யமுடியவில்லை. எனவே, வேறு ஒரு ஸ்டுடியோவுக்கு சென்றனர். ஆனால், அங்கு சில கருவிகள் வேலை செய்யவில்லை. எனவே, மதியம் மீண்டும் பிரசாத் ஸ்டுடியோ வந்து பாடலை ஒலிப்பதிவு செய்தனர். அப்படி ஒலிப்பதிவு செய்தபோது, ஸ்டூடியோவில் மியூசிக் கண்டக்டர் என ஒருவர் இருப்பார். அவர் கை அசைவுக்கு ஏற்ப இசைக்கலைஞர்கள் இசையை வாசிக்க துவங்குவார்கள். ஆனால், இந்தப் பாடல் இசையில் மயங்கி அவர் கை காட்டவே இல்லை. இசைக்கலைஞர்கள் வாசிக்காததால் இளையராஜா என்ன ஆச்சு என கேட்டபோது ‘டியூனில் என்னை மறந்துவிட்டேன்’ என சொல்லியிருக்கிறார்.

அதன்பின் எல்லாம் சரியாக நடந்துக் கொண்டிருந்தப்போது, பாடலை பாடிக்கொண்டிருந்த ஜானகி ‘பிள்ளை பெறாத பெண்மை தாயானது.. அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது’ என்கிற வரிகளை பாடாமல் நிறுத்திவிட்டார். எல்லோரும் ஜானகியை பார்த்தபோது அவர் தொடர்ந்து பாட முடியாமல் அழுது கொண்டிருந்தார். ஜானகியிடம் என்ன ஆச்சு என இளையராஜா கேட்க ‘இந்த இசையும், வரிகளும் என்னை ஏதோ செய்கிறது’ என சொல்லியிருக்கிறார். பின்னர் ஜானகியை ஆசுவாசப்படுத்தி சிறிது நேரம் கழித்தே அந்த பாடலை ஒலிப்பதிவு செய்து முடித்துள்ளனர்.
 

Leave a Reply