• Welcome to TamilsGuide
செய்திகள் 1

1950களில் திரையுலகில் கதாசிரியராக நுழைந்தவர் கண்ணதாசன். 

சினிமா

1950களில் திரையுலகில் கதாசிரியராக நுழைந்தவர் கண்ணதாசன். அதற்கு முன் சில பத்திரிக்கைகளில் வேலை செய்து வந்தார். அப்படியே கதை மற்றும் கவிதை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. அவரின் கவிதைகள் அவர் வேலை செய்து வந்த பத்திரிக்கைகளில் வெளியானது.

கதை எழுதுவதிலும் ஆர்வம் கொண்ட கண்ணதாசன் சினிமா உலகில் நுழைவது என முடிவெடுத்து சென்னை வந்தார். சில வருடங்கள் போராடி அதற்கான வாய்ப்புகளையும் பெற்றார். எம்.ஜி.ஆர் முதன் முறையாக தயாரித்து, இயக்கி, நடித்த நாடோடி மன்னன் படத்திற்கு வசனம் எழுதியவர் கண்ணதாசன்தான்.

இப்படி பல சரித்திர படங்களுக்கு கதை, வசனம் எழுதி இருக்கிறார் கண்ணதாசன். வசனம் எழுத கலைஞர் கருணாநிதி வந்தபின் முழுநேர பாடலாசிரியராக மாறினர் கண்ணதாசன். 60களில் வெளிவந்த பல படங்களுக்கு பாடல் எழுதியவர் இவர்தான். ஒருகட்டத்தில் கண்ணதாசனுக்கு போட்டியாக வாலி வந்து அவரும் பல பாடல்களை எழுதினார்.

முதலில் திமுகவில் இருந்த கண்ணதாசன் அதன்பின் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதனால், திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை அரசியல் மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால், தனது படங்களில் வாலியை மட்டுமே பாடல் எழுத வைத்தார் எம்.ஜி.ஆர்.

பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் 1965ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு பாடல் தேவைப்பட்டது. வாலி உட்பட பலர் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு பாடல் திருப்தியாக இல்லை. ‘கண்ணதாசனை வைத்து எழுத வைக்கலாமா?’ என அவரிடம் எம்.எஸ்.வி கேட்க எம்.ஜி.ஆரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

உடனே தொலைப்பேசியில் அவரை தொடர்புகொண்டு விஷயத்தை சொல்ல கண்ணதாசனும் பாடல் எழுத ஒப்புக்கொண்டார். தொலைப்பேசியிலேயே அவர் வரிகளை சொன்னார். அதுதான் ‘அதே அந்த பறவை வாழ வேண்டும்.. இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்’ பாடல் ஆகும். வரிகளை படித்து பார்த்து ரசித்த எம்.ஜி.ஆர் ‘இந்த படத்தில் மீதமிருக்கும் இன்னொரு பாடலையும் கவிஞரை வைத்தே எழுத வையுங்கள்’ என எம்.எஸ்.வியுடம் சொன்னார். அப்படி உருவானதுதான் ‘ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ’ பாடலாகும்.

Leave a Reply