• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சினிமாவில் எந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்கும். 

சினிமா

சினிமாவில் எந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்கும். அதனால் அந்த நடிகரின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறும் என சொல்லவே முடியாது. அந்த ஒரு வாய்ப்பு அந்த நடிகரின் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும். இது பல நடிகர்களுக்கும் நடந்திருக்கிறது. பாலச்சந்தரை ரஜினி சந்திக்காமல் போயிருந்தால் அவர் எப்படிப்பட்ட நடிகராக இருந்திருப்பார்? அல்லது சினிமாவுக்கு வராமலே கூட போயிருப்பாரா தெரியாது.

தோல்வி படங்களை கொடுத்து கொண்டிருந்த விஜயகாந்துக்கு ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தை கொடுத்து தூக்கிவிட்டவர் எஸ்.ஏ.சி. அது நடக்காமல் போயிருந்தால் விஜயகாந்த் என்னவாகியிருப்பார் என்பது யாருக்கும் தெரியாது. அன்னக்கிளி பட வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால் இளையராஜா வந்திருப்பாரா என்பதும் தெரியாது.

அப்படித்தான் நடிகர் திலகம் சிவாஜிக்கு அந்த பெயர் வர காரணமாக இருந்த எம்.ஜி.ஆர் பற்றி இங்கே பார்க்கப்போகிறோம். எம்.ஜி.ஆர் ராஜகுமாரி என்கிற படத்தில் முதன் முதலாக ஹீரோவாக நடித்துகொண்டிருந்தார். அப்போது டி.வி நாராயணசாமி என்கிற நடிகர் அவரை சந்தித்தார். அவர் திமுகவை சேர்ந்தவர். அறிஞர் அண்ணாதுரை எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகத்தில் நடிக்குமாறு எம்.ஜி.ஆரை கேட்டார்.

எம்.ஜி.ஆர் அப்போது காங்கிரஸில் இருந்தார். ஆனாலும், அந்த நாடகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். எனவே அவரை அழைத்துகொண்டு அண்ணாவிடம் சென்றார் நாராயணசாமி. ‘இவர்தான் நம் நாடகத்தில் சிவாஜியாக நடிக்கிறார்’ என அறிமுகம் செய்து வைத்தார். அவரை பார்த்து புன்னகைத்தார் அண்ணா. பின்னர் வசனங்களை படித்துப்பார்த்த எம்.ஜி.ஆர் மனப்பாடம் செய்வதற்கு ஏற்றபடி வசனங்களை கொஞ்சம் மாற்றி கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த தகவல் அண்ணாவிடம் சொல்லப்பட்டது. ஆனால், அவருக்கு நேரமில்லை. அவரின் ஒப்புதலுடன் எஸ்.ஏ.சாமி என்பவர் வசனங்களில் திருத்தம் செய்தார். ஆனால், ‘அந்த நாடகத்தில் நீ நடிக்க வேண்டாம்’ என எம்.ஜி.ஆரின் அவரின் அண்ணன் சக்கரபாணி சொல்லிவிட்டதால் அந்த நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடிக்கவில்லை.

பின்னர் அந்த வேடத்தில் வி.சி.கணேசன் என்கிற புதுமுக நடிகர் நடித்தார். இந்த நாடகத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் அவரின் பெயருக்கு முன்பு சிவாஜி சேர்ந்து சிவாஜி கணேசன் ஆனார். பின்னாளில் பராசக்தி படத்தில் ஹீரோவாக நடித்து பட்டாசு வெடித்தார்.
 

Leave a Reply