• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரசிகர்களின் பாராட்டால் அதிர்ந்து போன நடிகை லெட்சுமி.. அப்படி என்ன சொன்னாங்க தெரியுமா?

சினிமா

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என இரண்டு தலைமுறை ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்து எந்த கதாபாத்திரம் என்றாலும் அழகாக திரையில் கொண்டு வந்து இரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை லெட்சுமி.

ஹீரோயினாக லெட்சுமி ஜொலித்ததை விட குணச்சித்திர நடிகையாக ஜொலித்த படங்களே அவரை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தன. ஏனெனில் அக்கா, அண்ணி, அம்மா, பாட்டி என அனைத்து கதாபாத்திரங்களிலும் மனோரமாவைப் போலவே இயல்பாக நடித்து பெயரை வாங்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் 1970-80களில் பிஸியான நடிகையாகத் திகழ்ந்தார்.  மேலும் சமூக பிரச்சினைகளிலும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக வலம் வருகிறார்.

எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியுடன் இணைந்து நடித்த சில அனுபவங்களை பேட்டி ஒன்றில் தெரிவித்த லெட்சுமி, “எம்.ஜி.ஆருடன் 1972 ல் ‘இதயவீணை’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது காஷ்மீரில் எங்கள் எல்லோருக்கும் ஒரு இரவு விருந்து கொடுத்துவிட்டு, ‘விரைவில் தமிழகத்திற்கு ஒரு விருந்து தரப் போகிறேன்’ என்று எம்.ஜி.ஆர் சொன்னார். ஆனால் அப்போது எனக்கு, மஞ்சுளாவுக்கு எல்லாம், அது அரசியலைப் பற்றியது என்பதே புரியவில்லை.

அந்தப் படத்தில் டப்பிங் பேசியபோது கூட, “விரைவில் அரசியலுக்கு வருவேன்” என்கிற மாதிரியான மறைமுக வசனங்களை எம்.ஜி.ஆர் பேசியிருந்தார். அது கூட அவர் கட்சி ஆரம்பித்த பின்னர் தான் புரிந்தது. இப்படி ஒரு மக்கு ஆகத் தான் நான் இருந்திருக்கிறேன்.

அதுமட்டுமின்றி நடிகர் திலகத்துடன் நான் நடித்த ‘ராஜராஜசோழன்’ திரைப்படத்தில் நான் ஒரு நீளமான வசனத்தைப் பேசி விட்டு, என்னுடைய தலையில் இருக்கும் கிரீடத்தைக் கழட்டி வைத்துவிட்டுப் போகிற மாதிரியான காட்சி உண்டு.

படத்தில் அந்த காட்சியைப் பார்த்துவிட்டுப் பலபேர் என்னிடம் வந்து “அந்தக் காட்சியில் சிவாஜியையே தூக்கிச் சாப்பிடுகிற மாதிரி நடித்துவிட்டாய்” என்று என்னைப் பாராட்டினார்கள். நான் அதிர்ந்து போனேன். ஏனென்றால் அந்தக் காட்சியில் நான் எப்படி நடிக்க வேண்டும்; எப்படி வசனம் பேச வேண்டும் என்று எனக்குச் சொல்லித் தந்ததே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். அன்று அவர் சொல்லித் தராமல் போயிருந்தால் அந்தக் காட்சி அவ்வளவு சிறப்பாக வந்திருக்காது”. என்று அந்தப் பேட்டியில் தான் இணைந்து நடித்த சினிமாவின் ஜாம்பவான்களைப் பற்றிக் கூறியிருக்கிறார்.
 

Leave a Reply