கர்ணனாகத் தோன்றிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
சினிமா
கர்ணனாகத் தோன்றிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அவருடன் நடித்த திறமையான கலைஞர்கள், அது படம்பிடிக்கப்பட்ட விதம், கேட்க கேட்க திகட்டாத பாடல்கள், மிகவும் குறிப்பாக அதன் பிரம்மாண்டம்..... என்று அதன் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
உண்மையில், நிஜமான பிரம்மாண்டம் என்பது அதுதான். ஏனென்றால் தொழில்நுட்பங்கள், கணினி, கிராபிக்ஸ், அனிமேஷன்.... போன்று எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் பிடிக்கப்பட்ட படம் கர்ணன். அது, தமிழ்த் திரையுலகின் அதிசயம்.
ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நோக்கத்திற்காகவே சிருஷ்டி செய்யப்படுகிறார்கள். சிவாஜி கணேசன் நடிப்பதற்காகவே தோன்றினார். நடிப்பின் அகராதியாக விளங்கினார்.
பொதுவாக நடிகர்களின் முகம் நடிக்கும். நகம் நடிக்குமா? அவருக்குத்தான் அது வரும்.
சிவாஜி கணேசனின் மூலமாகத்தான் ஆதி சிவனையும், வீர சிவாஜியையும் தரிசித்தோம். கடவுள் பக்தியையும், தேசபக்தியையும் பெற்றோம்.
கட்டபொம்மனையும், கப்பலோட்டிய தமிழனையும் எவர் மூலம் பார்த்தோமோ, அவர் மூலம்தான் கர்ணனையும் கண்டோம்.
திருவருட்செல்வரின் தோன்றிய திருநாவுக்கரசரை மறக்க முடியாது. அந்தப் பாத்திரத்தில் அவரன்றி இன்னொருவரால் அப்படி வாழ்ந்திருக்க முடியாது.
தெய்விகத்தையும், தேசியத்தையும் கொள்கைகளாகக் கொண்ட நடிகர் திலகத்தின் ஒவ்வொரு திரைப்படங்களும் காலத்தால் அழியாத காவியங்கள்.
திரையுலகம் இருக்கும்வரை நின்று நிலைத்திருக்கும் இலக்கியங்கள்.
அவரது கதாபாத்திரங்களுக்கு ஜீவன் கொடுத்தவர் அவர். அவர் மறைந்திருக்கலாம். என்றாலும் அவர் பெற்ற புகழைப்போல அவரது பாத்திரங்கள் இப்போதும் உயிருடன்தான் இருக்கின்றன.
எவர் நடித்த பாத்திரங்களையும் அவரால் நடிக்க முடியும். ஆனால் அவர் நடித்த பாத்திரங்களை எவராலும் நடிக்க முடியாது. அவரைப் போல ஒரு கலைஞரை உலகத்தின் எந்த மூலையில் தேடினாலும் பார்க்க முடியாது.
அவற்றையெல்லாம் பாராட்டுவதற்கு வளமான தமிழில் வார்த்தைகள் உள்ளன. எனக்குத்தான் எழுதுவதற்குத் தெரியவில்லை.
உலகில் ஒரே ஒரு நடிகர்தான் உண்டு. அவர்தான் சிவாஜி கணேசன். மற்றவர்களெல்லாம் அவருக்குப் பிறகுதான்.
அந்தச் சிவாஜி கணேசன் 'கர்ணன்' என்னும் கதாபாத்திரத்திற்கு உருவாக்கிக் கொடுத்திருக்கும் பிம்பம் மகத்தானதாகும்.