• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆர் இனி நாடோடி தான் என கிண்டல் செய்தவர்களை மூக்குடைய வைத்த நாடோடி மன்னன்..

சினிமா

மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி என கலைஞர் கருணாநிதியின் கூர்மையான வசனங்களைப் பேசி நடித்து வந்த எம்.ஜி.ஆர் முதன் முதலாக கலைஞரை விடுத்து கண்ணதாசனை வசனம் எழுதச் சொல்லி இமாலாய வெற்றி கண்ட படம் தான் நாடோடி மன்னன்.

பராசக்தி, மனோகரா போன்ற படங்களின் வசனங்களால் கலைஞரின் மார்க்கெட் உச்சத்தில் இருந்த சமயத்தில் எம்.ஜி.ஆரும் தனது திரைப்படங்களால் புகழின் உச்சியில் இருந்தார். இந்நிலையில் எம்.ஜி.ஆர் தானே ஒரு படத்தினைத் தயாரித்து, இயக்கும் எண்ணம் கொண்டு இருந்த சமயம் அது. அப்படத்திற்கு கலைஞரை வசனம் எழுத வைக்கலாம் என்றால் கண்டிப்பாக அந்த வசனங்களை பேசித்தான் நடிக்க முடியும். சுயமாக சில முடிவுகளை எடுக்க முடியாது என்ற நோக்கில் கருணாநிதியை விடுத்து கண்ணதாசனை வசனம் எழுத வைத்தார் எம்.ஜி.ஆர்.

மேலும் கவிஞர் கண்ணதாசன் இந்தப் படத்திற்கு பாடல்கள் எழுதவில்லை. இருப்பினும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் உள்ளிட்ட 8 பேர் எழுதினார்கள். இருந்தும் பட்டுக்கோட்டையார் பாடல்களே பிரபலமானது. முதன் முறையாக இரட்டை வேடம் தரித்து ஏற்ற இப்படத்தின் மூலம் தான் கண்டிப்பாக ஒரு சாதனையை நிகழ்த்த வேண்டும் என பார்த்துப் பார்த்துச் செதுக்கினார் எம்.ஜி.ஆர்.

எப்படி இது ஏ.வி.எம், மார்டன் பிக்சர்ஸ் என்று சொல்கிறோமோ அதே போல் நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர் என்ற பெயரைக் கொண்டு வர வேண்டுமென அயராது இப்படத்திற்காக உழைத்தார் எம்.ஜி.ஆர். 2 வேடங்களில் எம்.ஜி.ஆர் நடிக்க, பானுமதி, எம்.என்.ராஜம், சரோஜாதேவி, வீரப்பா, நம்பியார், சந்திரபாபு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்தது. மேலும் கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி நாயகியாக அறிமுகமான படம் இது.

சந்திரபாபுவின் காமெடி படத்திற்கு பெரும் பலம் சேர்க்க வீரப்பாவுக்கும் எம்.ஜி.ஆருக்குமான ஆக்ரோஷமான வாள் சண்டை ரசிகர்களைக் கட்டிப்போட்டது திரையரங்குகளில். மேலும் இன்றும் புகழ் பெற்ற வசனங்களாக மனதில் நிற்கும் ‘நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறீர்கள், மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன் நான்’, ‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு. நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை’ போன்றவை அடித்தட்டு மக்களிடமும் எம்.ஜி.ஆரைக் கொண்டு சேர்த்தன.

இந்தப் படத்துக்கான அப்போதைய பட்ஜெட் ரூ.18 லட்சம். ‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன், இல்லையேல் நாடோடி’ என்று அறிவித்துவிட்டு படத்தை வெளியிட்டார் எம்.ஜி.ஆர். எதிர்பார்த்ததிற்கும் அதிகமாக படம் சக்கைப் போடு போட்டது. கூட்டம் கூட்டமாக பெரும் கொண்டாட்டமாகக் கொண்டாடி தீர்த்தார்கள் ரசிகர்கள். ஒரு கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி கொட்டிக் கொடுத்தது எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையைக் கொடுத்தது நாடோடி மன்னன்.

தமிழச்சி கயல்விழி
 

Leave a Reply