நடனம் கற்றுக்கொண்ட அனுபவத்தை பகிர்கிறார் கமல்ஹாசன் ....
சினிமா
கிளாஸிகல் டான்ஸ் கற்றுத்தரும் ஆசிரியர் ஒருவர் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்த அறைக்கு வாடகைக்கு வந்தார். ‘வீட்டிலேயே டான்ஸ் வகுப்புகளை நடத்திக்கொள்கிறேன்’ என்றார். ‘
வீட்டிலேயே நடன வகுப்பு. நீயும் சும்மாதான் இருக்கிறாய்’ என்று அம்மா என்னையும் அதில் சேர்த்து விட்டார். அப்படித்தான் எனக்கு பரதம் அறிமுகம் ஆனது.
அந்த நடன ஆசிரியர் ஒருநாளைக்கு நான்கு பேட்ச் என்று பிரித்து வகுப்பெடுப்பார். நான் அந்த நான்கு பேட்சுகளிலும் ஆடுவேன். இந்தத் தொடர் பயிற்சியால் எனக்கு பரதம் எளிதாக வந்தது.
‘எனக்குத் தெரிந்ததைக் கற்றுக்கொடுத்துவிட்டேன். நீயும் நன்றாக ஆடுகிறாய். அரங்கேற்றம் பண்ணலாம். ஆனால், நான் கற்றுத்தந்தது என்னளவில்தானே தவிர, கற்றுக்கொள்ள எல்லையில்லை. அடுத்து வேறொரு நல்ல ஆசிரியரை நானே பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, அவரே வேறொரு மாஸ்டரை அழைத்து வந்தார்.
ஒரு வாத்தியார் இப்படிச் சொல்லவே மாட்டார். ஆனால், அவர் சொன்னார், செய்தார்.
அடுத்து குல்கர்ணி என்ற ஒருவர் கதக் கற்றுத்தர வந்தார். பிறகு கொஞ்ச நாள் குச்சுப்புடி கற்றுக்கொண்டேன். பிறகு வடநாட்டு நடன வகைகள். இப்படி வீட்டில் இசையொலி கேட்டுக்கொண்டே இருக்க என்னைத் தேடி வந்த ஆசிரியர்களும் முக்கியமான காரணம்.
அதன் வழிவந்த இதர மொழிப் பாடல்களால் தமிழுக்கும் மற்ற மொழிகளுக்கும் உள்ள வேற்றுமையும் ஒற்றுமையும் தமிழின் தனித்தன்மையும் புரிந்தது. பாரதியின் `யாமறிந்த மொழிகளிலே’ என்னும் வரியின் அர்த்தம் அனுபவத்தால் உணர்ந்தேன்.
Paravasam Nayagan