• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மதுபானத்திற்கு பதில் குளிர்பானமா? - சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா (Tanzania) நாட்டுடன் இணைந்துள்ள முக்கிய சுற்றுலா பிரதேசம், ஜான்ஜிபார் (Zanzibar).

இப்பகுதியின் வருவாயில் 90 சதவீதம், இந்திய கடல் பகுதியில் அழகான கடற்கரைகளும் பாரம்பரியமும் உள்ள இதன் தீவுகளில் ஓய்வு எடுக்க வரும் சுற்றுலா பயணிகளால் கிடைக்கிறது.

கோடை காலம் நெருங்கும் நிலையில், உலகெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் ஜான்ஜிபாருக்கு வருவது வழக்கம். அவ்வாறு வருபவர்கள் குளிர்ந்த பீரை விரும்பி அருந்துவது அங்கு வழக்கமான ஒன்று.

சமீப சில மாதங்களாக இப்பகுதியில் மதுபானங்கள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

பீரின் விலை 200 சதவீதம் உயர்ந்துள்ளது.

மதுபான தட்டுப்பாட்டால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குளிர்பானங்களை வழங்கும் நிலையில் தங்கும் விடுதி மற்றும் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மதுபானம் கிடைப்பதில் சிக்கல் நீடித்தால் வரும் மாதங்களில் பயணிகள் வருகை குறைந்து விடும் என விடுதி உரிமையாளர்கள் அச்சப்படுகின்றனர்.

ஜான்ஜிபார் தீவுகளின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அங்கு மதுபான உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, தேவைகளுக்கு தென் ஆப்பிரிக்காவிலிருந்து மதுபானங்களை இறக்குமதி செய்கின்றனர்.

இறக்குமதியாளர்கள் ஜான்ஜிபாரிலேயே பிறந்திருக்க வேண்டும் என்பதும் $12000 ஆண்டு கட்டணம் அரசுக்கு செலுத்த வேண்டும் என்பதும் விதிமுறை.

புதிதாக 3 இறக்குமதியாளர்களுக்கு உரிமம் வழங்கியதிலிருந்து பல்வேறு காரணங்களால் தொடரும் சிக்கலில் இறக்குமதியாக வேண்டிய மதுபானங்கள் வருவதில்லை.

உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் சுற்றுலாவையே நம்பி உள்ளதால் இந்த நிலைமை அவர்களை அச்சுறுத்துவதாகவும், அரசு விரைந்து நிலைமையை சீர் செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.

கடந்த 2023ல், அதற்கு முந்தைய வருடங்களை விட ஜான்ஜிபாருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை 16 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply