• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீசாலை சோலையம்மன் கோயில் வரலாறு

இலங்கை

மீசாலை சோலையம்மன் கோயில்ஆனது சாதாரண கோயில்களைப் போல் அல்லாது பிரமிப்பாகவும் வியப்பாகவும் அத்தகைய இயற்கை சூழ் சூழலில் அமைந்திருக்கிறது அக்கோயில். பெயருக்கேற்றால் போலவே அக்கோயிலை கருநாவல், கொன்றை, கொக்கட்டி, கிஞ்சா, கூகைமா, மகிழமரம் போன்ற மரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்திருந்தது. அங்குள்ள இயற்கை சூழல் ஒருவித மனஅமைதியை அளிக்கக் கூடியது. கோயிலின் சூழலில் அமைந்திருந்த ஆல மரமும் அதுசார் பகுதியும் இக்கோயிலுக்கு மேலும் அழகை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இம்மட்டுக்கும் கோயிலின் அமைப்பும் அளவும் பாரியதாக இல்லையாயினும் இங்கிருக்கும் இயற்கையே கோயிலுக்கு பிரமிக்க தக்க வடிவையும் சிறப்பையும் வழங்கியுள்ளது.

வரலாறு
மீசாலை சோலையம்மன் கோயில்இவ்வாலயத்தின் தோற்றுவாய் பற்றி சரியாக அறிய முடியவில்லை ஆயினும் கிபி 1600 ஆம் ஆண்டிலிருந்து இக்கோயிலின் வரலாறு குறித்த சான்றுகள் கிடைக்கப் பெறுகின்றன. அக்காலப் பகுதியில் இங்கு ஆட்சிப் பொறுப்பிலிருந்த போர்துகீசத் தளபதிகளில் உயர் பதவியிலுள்ள ஒருவன் இப்பகுதியில் நடைபெற்ற வீதி புனரமைப்புக்களை கண்காணித்துக் கொண்டு குதிரையில் சென்ற போது இவ்வம்மன் ஆலயத்திற்கு அருகில் வந்ததும் குதிரை நோய்கண்டு வீழ்ந்து விட்டது. போர்த்துக்கீசனும் எவ்வளவோ முயன்றும் குதிரையை எழுப்பமுடியாது போகவே அக்காலத்தில் ஆலய அர்ச்சகராக இருந்த கந்தர் என்பவர் இக்கோயிலின் தீர்தத்தையும் திருநீறையும் குதிரைக்கு தெளித்து தடவிவிட்டார். இதனால் நோயிலிருந்து விடுபட்டு எழுந்த குதிரையை கண்டு வியப்படைந்த போர்த்துக்கீசன் இவ்வம்மனுக்கு ஏதோ சக்தியிருக்கிறது என்றஞ்சி வழிபட்டு கோயிலுக்கு மேலும் நிலத்தையும் மானியத்தையும் வழங்கியதுடன் பாதையையும் சீரமைத்துக் கொடுத்ததாக இக்கோயில் வரலாறுகள் கூறுகின்றன. இதுவே இக்கோயில் சார்ந்து நம்மால் அறியக்கூடியதாயுள்ள வரலாறாகும்.

தீர்த்தமும் மகோற்சவமும்

இவ்வாறு காலச்சிறப்பு மிக்க இக்கோயிலில் காணப்படும் “பாவநாசினி” எனும் வற்றாத தீர்த்த நிலையில் நீராடுபவர்கள் தம் பாவங்கள் களையப்பெற்று நோயற்று வாழ்வார்கள் எனக்கூறப்படுகிறது. சிறு குன்று போல் காணப்படும் இந்நீர்நிலையில் தண்ணீர் சொற்பமாகவே இருப்பதுபோல் காட்ச்சியளித்தாலும் அள்ளஅள்ள குறையாது ஊறிக்கொண்டே இருப்பது இதன் சிறப்பென சொல்லப்படுகிறது. மேலும் இக்குன்றினை சூழ்ந்து மூலிகைத்தன்மை வாய்ந்த மரங்கள் சூழ்ந்து இருப்பதால் அவற்றின் பாதிப்பால் இந்நீரூற்று மருத்துவக்குணம் மிக்கது என்றும் சொல்லப்படுகிறது.

மீசாலை சோலையம்மன் கோயில்இவ்வாறு மூர்த்தி தீர்த்தச் சிறப்புடைய இவ்வாலயம் முன்னர் முருகைக் கற்களால் கட்டப்பட்டிருந்தாலும் பின்னர் 1971 ஆம் ஆண்டளவில் பொலி கற்களால் கட்டப்பட்டு கும்பாவிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து இவ்வூர் மக்களாலும் நிர்வாகத்தினராலும் காலத்திற்கு காலம் உரிய வகையில் கோயில் நிர்வகிக்கப்பட்டுவருவதுடன் பல கும்பாவிஷேகங்களையும் இக்கோயில் சந்தித்து இன்று அழகுற விளங்குகிறது.

ஆகம நெறிகட்கு அமைவாக அமைந்துள்ள இவ்வாலயம் பரிவாரமூர்த்திகளாக விநாயகர், கண்ணகி, மகமாயி, பைரவர், முனீஸ்வரர், காளி போன்ற தெய்வங்களை கொண்டு விளங்குகிறது. கோயிலின் கர்ப்பகிரகத்தில் மனோன்மணி அம்பாள் சிறப்புற அமர்ந்து அருள்பாலிக்கிறார். தினமும் காலை மாலை பூசைகள் நடைபெறுவதுடன் வெள்ளி திங்கள் கிழமைகளில் மூன்று நேரப்பூசையும் இடம்பெறுகிறது. இவ்வாலய மகோற்சவம் ஆனிமாத பூர்வபக்க சஷ்டியில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பௌர்ணமியில் தீர்தோற்சவம் வரும் வகையில் நடைபெறுகிறது.

இவ்வாறு சோலைகள் சூழ் சூழலில் இயற்கை வனப்புடன் அமைந்துள்ள இக்கோயில் பெரிதாக அறியப்படாது இருப்பது வியப்புத்தான்.

Leave a Reply