• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புகையிரதத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையை 14 நாட்களுக்கு மூடுமாறு உத்தரவு

இலங்கை

மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கான கடுகதி புகையிரதத்திலுள்ள சிற்றுண்டிச்சாலையில் பாதுகாப்பில்லாமல் உணவை விற்பனை செய்தமை தொடர்பாக அதன் உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கையடுத்து எதிர்வரும் 8ம் திகதி வரை தற்காலிகமாக சிற்றுண்டிச்சாலையை மூடுமாறு நேற்று (23) நீதவான் உத்தரவிட்டு கட்டளை பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தலமையில் த.மிதுன்ராஜ், சோதிராஜா அமிர்தன், சோமசுந்தரம் யசோதன் ஆகியோர் கொண்ட பொது சுகாதார பரிசோதகர்கள் கொண்ட குழுவினர் திங்கட்கிழமை (22) இரவு நகரிலுள்ள பிரபல ஹோட்டல்கள் மற்றும் புகையிரத வண்டி சிற்றுண்டிச்சாலை, போன்றவற்றை திடீர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது பல ஹோட்டல்களில் மனித பாவனைக்கு உதவாத பல பொருட்கள் மீட்டு அழித்ததுடன் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துடன் சில ஹோட்டல்களை திருத்த வேலைகளை 3 நாட்களில் திருத்தி அமைப்பதற்காக பூட்டியுள்ளனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணிக்கவிருந்த் கடுகதி புகையிரதத்திலுள்ள சிற்றுண்டிச்சாலை சோதனையிட்ட போது அங்கு பாதுகாப்பற்ற முறையில் உணவு வியாபாரம் செய்தமை மற்றும் சிற்றுண்டிச்சாலையில் துப்பரவு இல்லாமை போன்றவற்றை கண்டறிந்து சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று (23) வழக்கு தாக்கல் செய்ததையடுத்து நீதவான் குறித்த புகையிரத வண்டி சிற்றுண்டிச்சாலையை எதிர்வரும் 8ம் திகதிவரை 14 நாட்களுக்கு மூடுமாறு குறித்த கட்டளையை பிறப்பித்துள்ளார்.
 

Leave a Reply