• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தியாவின் முதல் சைலண்ட் படம்... சினிமா அடையாளமாக மாறிய இயக்குனர்

சினிமா

இந்திய சினிமாவின் அடையாளமாக போற்றப்படும் புஷ்பக விமானா (பேசும் படம்) படத்தை இயக்கியவர் சங்கீதம் சீனிவாச ராவ்.
தமிழ் தெலுங்கு கன்னடம்  மலையாளம் இந்தி என இந்திய சினிமாவில் தனது சிறப்பான இயக்கத்தின் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் சங்கீதம் சீனிவாச ராவ் இன்று தனது 92-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இவர் இயக்கிய புஷ்பக விமானா (தமிழில் பேசும்படம்) இந்திய சினிமாவின் புதிய முயற்சியாக பலராலும் பாராட்டப்பட்டு பல விருதுகளை வென்றுள்ளது.

சங்கீதம் சீனிவாச ராவ் சினிமா பயணம்
இந்திய சுதந்திரத்திற்கு முன் 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தவர் சங்கீதம் சீனிவாச ராவ். இவரின் தந்தை பள்ளி ஆசிரியராகவும், தாய் வயலின் இசை கலைஞராகவும் இருந்துள்ளனர். சென்னை பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்ற இவர், கல்லூரியில் படிக்கும்போதே நாடகத்தில் நடித்து இயக்கி தனது திறமையை வளர்த்துக்கொண்டார். படிப்பை முடிந்துவிட்டு நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அப்போது முன்னணி இயக்குனராக இருந்த கே.வி.ரெட்டியை சந்திக்க முயற்சித்து தோல்வியடைந்துள்ளார்.

அதன்பிறகு ஆசிரியராக பணியாற்றி வந்த சங்கீதம் சீனிவாச ராவ், பிரமா  மற்றும் அந்தியகட்டம் உள்ளிட்ட நாடகங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய சித்ரார்ஜுனா என்ற இசை நாடகம் பிரின்ஸ் ஆஃப் தி டார்க் சேம்பரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட  நிலையில், இந்த நாடகம்,ஸ்காட்டிஷ் நாடக கலைஞர் டாம் புக்கனால் அமெரிக்க தொலைக்காட்சி சேனலுக்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு சுதந்திரா பத்திரிகையில் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார் .

பல துறைகளில் பணியாற்றி வந்தாலும் அவருக்கு பிடித்தமான இயக்குனர் கே.வி.ரெட்டியை சந்திக்கும் முயற்சியை கைவிடாத ராவ், 1954-ம் ஆண்டு அவரை சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளார். அப்போது கே.வி ரெட்டி, ஒரு நாவலை கொடுத்து அதற்கு திரைக்கதை எழுதும்படி கூறியுள்ளார், உடனடியாக பணிகளை தொடங்கிய சீனிவாச ராவ், 3 மாதங்களில் பணிகளை முடித்து கே.வி.ரெட்டியின் மனதை கவர்ந்துள்ளார்.

இயக்குனராக அறிமுகம் – தமிழில் முதல் படம்
1957-ம் ஆண்டு வெளியான மாயா பஜார், 1961-ம் ஆண்டு வெளியான ஜகதேகா வீருணி கதா ஸ்ரீ, தொங்கா ராமுடு, கிருஷ்ணர்ஜூனா யுத்தம் உள்ளிட்ட பல படங்களில் கே.வி.ரெட்டியின் இணை இயக்குனராக பணியாற்றிய சங்கீதம் சீனிவாச ராவ், 1972-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான நீதி நிஜயிதி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை என்றாலும் பலரின் பாராட்டுக்களை பெற்றது. அதன்பிறகு 1974-ம் ஆண்டு திக்கற்ற பார்வதி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

ஸ்ரீகாந்த் – லட்சுமி இணைந்து நடித்திருந்த இந்த படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது மற்றும் ஃபிலிம்பேர் விருதை வென்றது. அதன்பிறகு தமிழ் படங்களை இயக்காத சீனிவாச ராவ், தெலுஙகில் பல படங்களை இயக்கினார். இதில் 1977-ம் ஆண்டு சமூகபிரச்சனையை அடிப்படையாக வைத்து இவர் இயக்கிய தாரம் மரிந்தி திரைப்படம் சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்காக நந்தி விருதை பெற்றிருந்தது, அதன்பிறகு நிலபரையும் நிலவிளக்கும் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.

மீண்டும் தமிழில் இயக்குனர்
1981-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் அவரது 100-வது படமாக வெளியான ராஜபார்வை படத்தின் மூலம் மீண்டும் தமிழில் இயக்குனராக ரீ-என்டரி ஆன சங்கீதம் சீனிவாச ராவ், 1989-ல் அபூர்வ சகோதராகள், 1990-ல் மைக்கேல் மதன காமராஜன், 1994-ல் மகளிர்மட்டும், 1995-ல் சின்ன வாத்தியார், 1988-ல் காதலா காதலா, 2001-ல் லிட்டில் ஜான், 2005-ல் மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தமிழ் படங்களை இயக்கியுள்ளார்.

தமிழில், தக்கற்ற பார்வதி என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தாலும், தமிழில் இதுவரை 9 படங்கள் மட்டுமே இயக்கியுள்ள சங்கீதம் சீனிவாசராவ், 5 படங்களை கமல்ஹாசன் நடிப்பில் இயக்கியுள்ளார். மகளிர் மட்டும் திரைப்படம் கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியானது. இதற்கு முக்கிய காரணம் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கமான நட்புதான்.

இந்திய சினிமாவில் புதிய முயற்சி ''புஷ்பக விமானா''
கமல்ஹாசன் நடிப்பில் ராஜபார்வை படத்தின் மூலம் தமிழில் ரீ-என்டரி ஆன சங்கீதம் சீனிவாச ராவ், 1987-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் புஷ்பக விமானா என்ற படத்தை கொடுத்தார். இந்த படத்தை இயக்கி தயாரித்த அவர், இந்திய சினிமாவின் புதிய முயற்சியாக இந்த படத்தை ஒரு சைலண்ட் படமாக இயக்கினார். கமல்ஹாசன், அமலா பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம், இந்திய முழுவதும் வெளியானது. தமிழில் பேசும் படம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

படத்தில் வசனங்கள் இல்லை என்றாலும் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ளும் வகையில் அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் சங்கீதம் சீனிவாசராவ். இந்த படம் சிறந்த படத்திற்கான தேசிய விருது, பிலிம்ஃபேர் விருது, மற்றும் கர்நாடக அரசின் மாநில விருதை வென்றிருந்தது. புஷ்பக விமானா படம் வெளியாகி 36 வருடங்கள் கடந்திருந்தாலும், இன்றும் இந்திய சினிமாவின் ஒரு அடையாளமாக திகழ்கிறது.

புஷ்பக விமானா (பேசும் படம்) உருவான விதம்
இயக்குனர் சங்கீதம் சீனிவாச ராவ் இயக்குனர் கே.வி.ரெட்டியிடம் இணை இயக்குனராக பணியாற்றியபோது ஒரு படத்தில் ஒரு கேரக்டருக்கு எந்த வசனமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். இந்த யோசனை பின்னாளில் ஒரு படத்தையே வசனம் இல்லாமல் எடுத்தால் என்ன என்று அவருக்கு தோன்றுள்ளது. ஆனால் அதற்கான கதை இல்லாதததால் அந்த யோசனையை அப்படியே கிடப்பில் போட்டுள்ளார். அதன்பிறகு ஒருநாள் அவர் ஒரு படத்தின் திரைக்கதை எழுதும்போது இந்த படத்திற்கான யோசனை தோன்றியுள்ளது.

இது பற்றி உடனடியாக நடிகர் கமல்ஹாசனிடம் சொல்ல, திரைக்கதையால் ஈர்க்கப்பட்ட கமல்ஹாசன் உடனடியாக இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். முதலில் சோகமாக இருந்த இந்த கதையில், கமல்ஹாசன் – சீனிவாசராவ் இருவரும் இணைந்து சார்ளி சாப்ளின் போன்று சோகத்தையும் காமெடியாக மாற்றியுள்ளனர். இந்த படம் இந்தியாவின் முதல் சைலண்ட் படம் என்ற பெருமையை இன்றுவரை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
 

Leave a Reply