• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பள்ளி வளாக துப்பாக்கிச் சூடுகள் - விவேக் ராமசாமியின் அதிரடி கருத்து

அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ளது, அயோவா (Iowa) மாநிலம்.

இம்மாநில தலைநகரான டெஸ் மாயின்ஸ் (Des Moines) நகரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெர்ரி உயர் நிலை பள்ளி (Perry High School).

நேற்று காலை இங்கு நடைபெற்ற ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு மாணவர் உயிரிழந்தார்; 5 பேர் காயமடைந்தனர். அதில் ஒருவர் அப்பள்ளி தலைமை ஆசிரியர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய டைலன் பட்லர் (Dylan Butler) எனும் 17 வயது மாணவர் தன்னை தானே சுட்டு கொண்டு உயிரிழந்தான்.

அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கிய இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தற்போது வரை இதற்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

சில வருடங்களாக அமெரிக்காவில் பள்ளி வளாகங்களில் இது போன்று நடைபெறும் துப்பாக்கிச் சூடுகளும் அதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

கடந்த 2023ல், அமெரிக்காவில், பள்ளி வளாகங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 82 என தரவுகள் தெரிவிக்கின்றன. இவற்றில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் அடங்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 37 ஆகும்.

பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள் மனநல நிபுணர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இத்தகைய சம்பவங்களை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட ஆதரவு தேடி வரும் விவேக் ராமசாமி, இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து தெரிவித்ததாவது:

துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது எதிர்வினையாகும். இப்பிரச்சனை அடிப்படையில் மனநலம் சம்பந்தப்பட்டது.

சமூகத்தில் உள்ள ஆழமான பிரச்சனைகளே இதற்கு காரணம்; துப்பாக்கிகளின் எண்ணிக்கை அல்ல. பிரச்சனையின் வேர் வரை சென்று அதை தீர்க்க முனையாமல் இருப்பது தவறான அணுகுமுறை.

ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் உடனடியாக ஒரு சட்டமியற்றுவதும் நாங்களும் ஏதோ செய்து விட்டோம் என கூறுவதும் வெறும் உணர்ச்சிகரமான தீர்வு.

இன்றோ, நாளையோ "துப்பாக்கிகளை தடை செய்யுங்கள்" எனும் கூக்குரல் அதிகரிப்பதை பார்க்கத்தான் போவீர்கள்.

"காரணமின்றி செயல்படுதல்" எனும் நோய் நமது சமூகத்தின் இதயம் மற்றும் உயிரிலும் கலந்து விட்டது.

இவ்வாறு விவேக் கூறினார்.
 

Leave a Reply