• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அயோத்தி செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

சினிமா

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோவில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி, கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, அயோத்தி - ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, கும்பாபிஷேக நிகழ்வுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஆர்எஸ்எஸ் தென்னிந்திய அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர் வருகை தந்து அழைப்பிதழ் வழங்கினர்.

இந்நிலையில், வருகிற 22-ந்தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.

அதற்காக வரும் 21-ந்தேதியே நடிகர் ரஜினிகாந்த் அயோத்திக்கு புறப்பட்டு செல்கிறார். அவருடன் மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணாவும் பங்கேற்கின்றனர்.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 8000 பேரில் 3500 பேர் சன்னியாசிகள், மற்றவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் ஆவர். 8000 பேருக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உத்தரபிரதேச அரசு செய்து வருகிறது.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முடித்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் வரும் 23-ந்தேதி சென்னை திரும்புகிறார். 
 

Leave a Reply