• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உறையும் பனிப்பொழிவு - ஸ்வீடனில் சாலையில் ஸ்தம்பித்த 1,000 வாகனங்கள்

ஸ்வீடனில் 24 மணி நேரத்திற்கும் மேலாக கடும் பனியில் 1,000 வாகனங்களில் சிக்கியிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். தெற்கு ஸ்வீடனின் ஸ்கேன் பகுதியில் E22 பிரதான சாலையில் சிக்கியிருந்த மக்களை மீட்க மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் பணியாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
  
சிக்கியவர்களில் பலர் மீட்புக் குழுக்களால் வெளியேற்றப்பட்டனர். ஆனால் பின்னர் தங்கள் கார்களுக்குத் திரும்ப வலியுறுத்தியுள்ளனர். நோர்டிக் நாடுகளில் குளிர்கால வெப்பநிலை வீழ்ச்சிக்கு மத்தியில் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஸ்வீடன், பின்லாந்து மற்றும் நார்வேயின் சில பகுதிகளை கடுமையான குளிர் தாக்கியுள்ளது. டென்மார்க்கில் பனிப்புயல் காரணமாக புதன் கிழமை முதல் ஆர்ஹஸ் அருகே உள்ள ஒரு நெடுஞ்சாலையில் வாகன சாரதிகளை சிக்க வைத்துள்ளன.

வடக்கு ஸ்வீடனில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிழமை கடுமையாக குளிரை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வெப்பநிலை -43.6C அளவுக்கு சரிவடைந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், கார்களில் பயணித்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாகவும், வியாழக்கிழமை காலை வரை லொறி சாரதிகள் மட்டுமே தங்கள் வாகனங்களில் இருந்ததாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் 180 கனரக லொறிகளின் சாரதிகளை மீட்கும் பணி பின்னர் தொடங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. பயணம் தொடர முடியாமல் கார்களில் சிக்கியியிருந்த பலர் 19 மணி நேரத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சாலையில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவும் குடிநீரும் விநியோகம் செய்யும் பணியில் ஸ்வீடன் ராணுவம் களமிறக்கப்பட்டது. வியாழக்கிழமை காலை ஸ்கேன் பகுதியில் பேருந்துகள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர். 
 

Leave a Reply