• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு

இலங்கை

வவுனியாவில்  இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோரினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது   உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படங்களின் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில்  காணாமல்  ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட  குறித்த  போராட்டமானது  இன்றுடன் 2500 ஆவது நாளைக் கடந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  ”உலகத் தமிழர் பேரவையினரின் செயற்பாடு தமிழ் மக்களுக்கு விரோதமானது எனவும், அவர்கள் இமாலய துரோகிகள் எனவும் தெரிவித்திருந்ததோடு தமிழ் மக்களுடைய அபிலாசைகளையும் இறைமையும் பாதுகாப்பதற்கு பொதுவாக்கெடுப்பு ஒன்றே உரிய தீர்வு எனவும் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் அங்கு மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் புகைப்படம் மீது முட்டை வீசி தமது எதிர்ப்பினையும் வெளிப்படுத்தி இருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார்” நல்லிணக்கம் என்ற கருத்து சிங்கள சமூகத்தின் நம்பிக்கைகளுக்கு இணையானதல்ல, மாறாக, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.

கடந்த 14 ஆண்டுகளில், இனப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, LLRC, UNHRC தீர்மானம் மற்றும் நல்லிணக்கம் போன்ற வார்த்தைகள் அதிகளவில் பிரபலமடைந்து வருவதை தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். இருப்பினும், உண்மையில், நடைபெறும் நிகழ்வுகள் நல்லிணக்கக் கொள்கைகளுக்கு முரணானதாகவே தெரிகிறது. தமிழ் மக்களின் அபிலாஷை தமிழ் இறையாண்மையாகும், அதனை பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க முடியும். பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் மக்களின் அபிலாஷை தமிழ் இறையாண்மையாகும், அதனை பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க முடியும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply