• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தற்போதைய நாட்கள் தமிழ் மக்களுக்கு ஆபத்தானவை - சிறீதரன் 

தற்போதைய நாட்கள் தமிழ் மக்களுக்கு ஆபத்தானவை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று(5) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக சிறிலங்கா அரசாங்கம் இளைஞர்களையும், இளைஞர்கள் செயற்பாட்டாளர்களையும் கைது செய்து அவர்களை குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் இராணுவ புலனாய்வு ஊடாக விசாரணை என்ற பெயரில் தன்னுடைய நடவடிக்கைகளை ஆரம்பித்து இருக்கின்றது.

அதனுடைய ஒரு கட்டமாக செய்தியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கையினுடைய ஊடகவியலாளர்கள் உட்பட வெளியில் இருக்கின்ற பலபேரை இலங்கை அரசு கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை அண்மைய காலப்போக்குகள் காட்டி வருகின்றன.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிக்கையினுடைய ஆசிரியர் திலீப் அமுதன் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினரால் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் விசாரணை செய்யப்பட்டுவாக்கு மூலமும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.

அதேபோல மாவீரர் தின நிகழ்வுகளை முன்னெடுத்து இருக்கின்ற கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு தலைவராக செயல்படுகின்ற தர்மானந்தம் ஐயாவுடைய இல்லத்துக்கு நேற்று இரண்டு தடவைகள் ஆட்டோ வாகனத்தில் சி ஐ டி யினர் என்று தங்களை அறிமுகம் செய்து அவரை விசாரணைக்கு என்று அழைத்திருக்கின்றார்கள்.

அவர் அந்த நேரத்தில் யாழ்ப்பாணம் சென்றதினால் அவர் மீது இன்னும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை.

தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் நடைபெறுகின்றன. பல இடங்களில் இளைஞர்கள் விசாரணைக்காக அழைக்கப்படுகின்றார்கள்,

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற பல அரசியல் செயற்பாட்டாளர்கள், தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு என அழைத்து அவர்களை கடுமையான விசாரணையின் பிற்பாடு பயமுறுத்தி அச்சுறுத்தி விடுகின்ற செயற்பாடுகளை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் அண்மைக்காலமாக இவ்வாறான செயற்பாட்டை அவதானிக்க முடிகின்றது, இது அரசாங்கத்தினுடைய ஒரு கையாலாகாத தனத்தை காண்பிக்கின்றது.

குறிப்பாக நவம்பர் மாதம் என்பது தமிழர்களுடைய உணர்வோடு சேர்ந்த ஒரு தேசிய மாதம், தமிழீழத்தில் தங்களுக்காக தங்களுடைய இன்னுயிர்களை மண்ணுக்காக தியாகம் செய்த மாவீரர்களை அவர்கள் நினைவில் கொள்கின்ற மாதம்.

அவ்வாறான இந்த மாதத்திலே பல மக்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கான விளக்கேற்றுகின்ற நிகழ்வுகளுக்காகவும், சகோதரர்கள் குடும்பத்தவர்கள் அந்த நடவடிக்கையில் ஈடுபடுகின்ற போது அவற்றை அச்சுறுத்தும் வகையில் தான் அரசாங்கம் இந்த செயற்பாட்டை முன்னெடுத்து இருக்கின்றது.

தான் ஒரு லிபரல்வாதி என அடையாளம் காட்டிக் கொள்ளுகின்ற இந்த நாட்டினுடைய அதிபர், நிலை மாறுகால நீதிப் பொறிமுறையின் அடிப்படையில் வணக்கங்கள் செலுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என கூறிக் கொள்கின்ற இன்றைய அதிபர், அண்மைய நாட்களில் அமெரிக்க சென்று அமெரிக்காவில் கூட நான் எல்லா வணக்க முறைகளுக்கும் வாசலை திறந்து தமிழ் மக்களை அரவணைத்துச் செல்லுகின்றேன் என்று சொல்லுகின்ற இன்றைய அதிபருடைய தலைமையில், அவருடைய பாதுகாப்புத் துறையும் படைகளும் மிக மோசமாக இளைஞர்களையும், யுவதிகளையும் விசாரணைக்கு அழைத்திருப்பது ஒரு பயங்கரமான செயற்பாட்டை அது முன்வைக்கின்றது.

குறிப்பாக இந்த மாதம் தங்களுடைய வணக்க முறைகளை அவர்கள் தாங்கள் செய்கின்ற இந்தக் காலகட்டத்தை பயன்படுத்தி முகநூல்களில் வெளிவருகின்ற செய்திகள், மற்றும் சமூக வலைத்தளங்களில் வருகின்ற செய்திகள் படங்களை வைத்துக்கொண்டு அவற்றை விசாரணைக்கு என முற்படுத்த முனைகின்றார்கள்.

குறிப்பாக 2020 ஆம் ஆண்டு உதயன் பத்திரிக்கையில் வெளிவந்த செய்திக்காகத்தான் இந்த ஆண்டு திலீப் அமுதன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்.

இதே போல முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய பத்திரிக்கையாளர்களும் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றார்கள். அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இருக்கின்ற மனிதனேய செயற்பாட்டாளர்கள் அடிக்கடி விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

மயிலத்தமடு, மாதவனை போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறான செயற்பாடுகள் அதிகமாக அரசாங்கத்தாலும், அரச படைகளாலும் குறிப்பாக பிக்குமார்களாலும் முன்னெடுக்கப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறுபட்ட இடங்களிலும் பிக்குமாரினால் தமிழர்களுடைய இடங்கள் கபளீகரம் செய்யப்படுவதுடன், மக்களை அச்சுறுத்துகின்ற நடவடிக்கைகளும் மிகப்பெரிய அளவிலே இடம்பெற்று வருகின்றது.

இந்த நாட்டின் ஜனநாயகம் செத்து, நீதி செத்து இந்த நாடு ஒரு சிங்கள பௌத்த இனத்துக்குரிய ஒரு நாடாக அல்லது அவர்களை மட்டுமே கையாளுகின்ற ஒரு நாடாக ஏனைய இனங்கள் வாழ முடியாத பன்முகத்தன்மை இல்லாத ஒரு நாடாக தன்னை அடையாளப்படுத்தி செல்வதையே அண்மைக்கால போக்குகள் மிகத் தெளிவாக காட்டுகின்றன.

ஆகவே, இந்த நாட்கள் தமிழ் மக்களுக்கு ஆபத்தான நாட்களாகவும், தொடர்ந்து அவர்களை அச்சுறுத்துகின்ற நாட்களாகவும் அமைந்திருக்கின்றது" என்றார்.
 

Leave a Reply