படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த அரசிற்கு நன்றி- சூர்யா நெகிழ்ச்சி
சினிமா
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான படம் 'ஜெய் பீம்'. இந்த படத்தில் லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் பல தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர்.
இந்நிலையில், 'ஜெய்பீம்' திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மகிழ்ச்சியை படக்குழுவினர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா, முதலமைச்சருக்கும் தமிழ்நாடு அரசிற்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.