• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாரப்பா பழநியப்பா பட்டணமாம் பட்டணமாம்...

சினிமா

இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் குழுவில் இவர் ஆர்மோனியக் கலைஞராகவும், டி.கே.ராமமூர்த்தி வயலின் கலைஞராகவும் சேர்ந்தனர்.

சுப்புராமனின் திடீர் மறைவால் பாதியில் நின்ற அவரது படங்களை இவர்கள் இருவரும் முடித்துக் கொடுத்தனர். ‘தேவதாஸ்’, ‘சண்டிராணி’ படங்களின் இணை இசையமைப்பாளர்களாக அறிமுகமாயினர். ‘பணம்’ திரைப்படத்தில் ஆரம்பித்து, ‘ஆயிரத்தில் ஒருவன்’ வரை 700 திரைப்படங்களுக்கு இணைந்து இசையமைத்தனர்.l எம்எஸ்வி தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவோடு சேர்ந்து 3 படங்களுக்கு இசையமைத்தார். ‘கண்ணகி’, ‘காதல் மன்னன்’, ‘காதலா காதலா’ உட்பட 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, திருலோகசந்தர், கே.பாலசந்தர் ஆகிய 4 இயக்குநர்களிடம் அதிகம் பணிபுரிந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் 1,200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.‘புதிய பறவை’ படத்தில் வரும் ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளையும், ‘பாகப்பிரிவினை’ படத்தில் வரும் ‘தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு 3 இசைக் கருவிகளையும் பயன்படுத்தியவர். பியானோ, ஆர்மோனியம், கீ போர்டு அற்புதமாக வாசிப்பார். ‘நீராரும் கடலுடுத்த..’ என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்தவர். கர்னாடக இசை மேதைகள் எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களை தன் இசையில் பாடவைத்துள்ளார். இவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போரின் முடிவில் 1965-ல் போர் முனைக்குத் தன் குழுவினரோடு சென்று ஆர்மோனியத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, காயமுற்ற படை வீரர்களுக்காகப் பாடினார்.ஒரே பிறந்த தேதியைக் கொண்ட தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் எம்எஸ்வி-யும், கவியரசு கண்ணதாசனும் சிறந்த நட்புக்கு உதாரணமாகத் திகழ்ந்தனர். இவர் இசையமைத்த ‘அத்தான் என்னத்தான்’ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் சென்னையிலேயே தங்கிவிடுவேன்’ என்று லதா மங்கேஷ்கர் ஒருமுறை கூறினார். மெல்லிசை மன்னர், கலைமாமணி, திரை இசை சக்கரவர்த்தி உள்ளிட்ட பல பட்டங்களையும் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர். அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்களை தன் இசையால் மகிழ்வித்துவருகிறார். இவரது இசைக்கு மயங்கும் ரசிகர்கள் இன்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உள்ளனர். 

தமிழ் உலகில், பாரதி எனும் கவிஞனுக்குப் பிறகு உலகெங்கும் ஒலித்த தமிழ்க் குரல்கள், இன்னொரு கவிஞனை கொண்டாடியது என்றால் அது கண்ணதாசனாகத்தான் இருக்கும். கண்ணதாசனுக்கு முன்னதாகவும் எத்தனையோ கவிஞர்கள் சினிமாவில் பாட்டெழுதியிருக்கிறார்கள். ஆனால், கண்ணதாசனைத்தான் தன் மனதில் ஆசனம் போட்டு அமரவைத்து சீராட்டினார்கள். காரணம்... சினிமாப் பாட்டுக்குள் வாழ்க்கையைத் தேன் கலந்து கொடுத்த சித்தமருத்துவக்காரன் கண்ணதாசன்.

‘எங்க ஊர் ராஜா’ படத்தில், ‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’ என்று சிவாஜியின் கேரக்டருக்கு பாட்டெழுதியிருப்பார் கண்ணதாசன். ஆனால், அதை தனக்கான பாட்டு என கேட்டவர்கள் மொத்தபேரும் வரித்துக்கொண்டதுதான், கண்ணதாசன் வரிகளின் செப்படிவித்தை.,‘காலமகள் கண் திறப்பாள் சின்னய்யா’ என்ற பாடலைக் கேட்டு ஆறுதலும் நம்பிக்கையும் அடைந்தார்கள். ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே’ என்ற பாட்டைக் கேட்டுவிட்டு, தங்கை இல்லாதவர்கள் கூட அழுதார்கள். தங்கை இல்லையே என்றும் அழுதார்கள்.‘எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும்பகலும் நடக்கவா - இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை கொண்டு வணங்கவா இரு கை கொண்டு வணங்கவா’ என்று பிரிவுத்துயரத்துக்கு இந்த சிறகை இணைத்துக் கொண்டு ஆறுதலாகப் பறந்தார்கள்.

காதலின் அர்த்தமோ ஆழமோ தெரியாமல் இன்றைக்குத் தத்தளித்து தவித்து மருகிக் கொண்டிருக்கும் சமூகத்துக்கு, அன்றைக்கே காதலைச் சொன்னார் கவியரசர். ‘இளமையிலே காதல் வரும் எது வரையில் கூடவரும், முழுமை பெற்ற காதலெல்லாம் முதுமை வரை கூட வரும்’ என்று காதலின் ஆயுசைச் சொன்னார்.

வாழ்க்கையின் சிக்குகளுக்குள் சிக்கித்தவித்து விழுந்து கிடந்தவர்களை ‘மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா’ பாடல் தண்ணீர் தெளித்து எழுப்பியது. ’மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ என்ற பாடலைக் கேட்டு, துக்கித்துப் பாடிய கேரக்டருக்கு தோழியானவர்கள் தோழமையானவர்கள் பலர் உண்டு.

‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா’ காதலின் சோககீதம்; தேசியகீதம். ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’ பாடலைக் கேட்டு, வலியை மென்று தின்றவர்கள் ஏராளம்.,காதலியை வெட்டு, குத்து, கொல்லு என்றெல்லாம் பாடப்பட்டு வரும் இந்தக் காலத்தில், ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்பதை தாரக மந்திரமாகவும் காதலின் மந்திரமாகவும் ஆக்கிய கவிஞரின் வரிகள், வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறது இன்னமும்.

எம்ஜிஆருக்கு ‘ஹலோ ஹலோ சுகமா, ஆமாம் நீங்க நலமா?’ என்று போனிலேயே பாட்டுப்பாட எழுதிக்கொடுத்தார் அன்றைக்கு. எழுபதுகளில், கமலுக்கு ‘ஹலோ மை டியர் ராங்நம்பர்’ என்றும் ரைட் ஸாங் கொடுத்தார்.

‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும்’ என்று வாழ்வின் யதார்த்தம் சொல்லி பந்தி வைத்த பாட்டுக்காரன்.

‘கங்கையிலே ஓடமில்லையோ?’ என்றும் பாட்டெழுதினார். ‘குடிமகனே* பெருங்குடிமகனே’ என்று ’வசந்தமாளிகை’ ஜமீன் போதையில் நம்மைத் தள்ளாடவைத்தார். ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்று கண்ணனுக்கு புல்லாங்குழல் கொடுத்தார். ‘இரண்டு மனம் வேண்டும்’ என்று இறைவனிடம் கேட்டார். ‘வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது?’ என்று ஜனன மரணத்தை யோசிக்கவைத்தார்.

‘பாரப்பா பழநியப்பா பட்டணமாம் பட்டணமாம்’ என்றும் பாடிவைத்தார். ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ என்றும் சொல்லிவைத்தார். ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்று காதல் காவியமாக்கினார். ‘எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன்’ என்று துயரம் சொல்லி அவரின் பேனா அழுதது. ‘அட சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டிவிடவா?’ என்று கொஞ்சினார். ’காய்காய்காய்’ என்று இனிக்க இனிக்க பாடல் தந்தார். ‘தேன் தேன் தேன்’ என்று திகட்டத்திகட்ட பாடல் தந்தார். ‘நிலா லா லாலா என்று’ பாடினார்.

அண்ணன் இருக்கிறாரா? அந்த உறவுடன் பொருந்திப்போகும் கண்ணதாசனின் பாட்டு. தம்பி இருக்கிறாரா? ‘அம்மம்மா தம்பி என்று நம்பி’ என்று அதற்குப் பொருந்துவதற்கும் ஒரு பாட்டு. தங்கை உண்டா? பாட்டு உண்டு. அக்கா இருக்கிறாரா? அவருக்கும் உண்டு பாட்டு. சகோதரிகளுக்குள்ளான உறவா? அதைச் சொல்லவும் பாட்டு. சகோதரர்களுக்குள் இருக்கும் உறவா? அவர்களுக்கும் எழுதியிருக்கிறார் பாட்டு.

’பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம்* எல்லோருக்கும் தந்தை இறைவன்’ என்றும் ‘ஏன் பிறந்தாய் மகனே’ என்றும் பிள்ளையை வைத்துக்கொண்டு பாடியிருக்கிறார். ‘சொந்தம் ஒருகைவிலங்கு நீ போட்டது அதில் பந்தம் ஒருகால்விலங்கு நான் போட்டது’ என்றும் குமுறியிருக்கிறார்.

கல்யாணத்துக்கு, வளைகாப்புக்கு, காதலின் வெற்றிக்கு, காதலின் தோல்வி சொல்ல, நட்பின் ஆழம் சொல்ல, உத்தியோகம் கிடைக்க, வியாபாரத்தில் செழித்ததையும் நொடித்ததையும் சொல்ல, எத்தனை பாட்டுகள்? ‘கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்’ என்று கடவுளுக்கே சாபம் கொடுப்பார். ‘தெய்வம் இருப்பது எங்கே?’என்று கேள்வியும் கேட்பார். ’தெய்வமே தெய்வமே...’ என்பார். ‘கண்ணா கருமைநிறக்கண்ணா’ என்பார். ‘கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்’ என்று கிருஷ்ண தரிசனத்தில் திளைப்பார்.*

‘உன்னை அறிந்தால்’ என்பார். ‘சட்டிசுட்டதடா’ என்பார். ‘என்ன நினைத்து என்னை படைத்தாயோ?’ என்று கேட்பார். ’சிறு இன்பம் போன்ற துன்பத்திலே இருவருமே நடந்தோம்’ என்பார். ‘காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி’ என்று கடவுளை கூண்டுக்குள் ஏற்றுவார். ’ஆறு மனமே ஆறு’ என்று வாழ்வின் தத்துவத்தை எளிமையாக எடுத்துரைப்பார்.

‘பாதை வகுத்தபின் பயந்தென்ன லாபம், பயணம் நடத்திவிடு விலகிடும் பாவம்’ என்பார். ‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு போடி தங்கச்சி... தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு’ என்பார். ‘ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி, முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி’ என்பார்.*

ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கையில் எத்தனையெத்தனை சம்பவங்கள், தோல்விகள், சந்தோஷங்கள், வெற்றிகள், காயங்கள். அத்தனைக்கும் மருந்து போட்ட காரைக்குடி மருத்துவன் கண்ணதாசன். 

Leave a Reply