• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேலுக்கு சவாலாக விளங்கும் ஹமாஸ் குழுவினரின் இரகசிய சுரங்கங்கள்

ஹமாஸ் குழுவின் எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பினரால் காசா பகுதிக்குக் கீழே ரகசியமாக பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட சுரங்க அறைகளில் சில பகுதிகளைத் தாக்குவதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோனதன் கான்ரிகஸ், இந்த ரகசிய நிலத்தடி அறைகளின் கட்டமைப்பு ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிவித்திருந்தார்.

“இருபது ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, அவர்கள் காசா நகரத்திலிருந்து தெற்கில் இருக்கும் கான் யூனிஸ் மற்றும் ராஃபா வரை இந்த சுரங்க கட்டமைப்புகளை அமைத்தனர்,” என்றார்.

அவர் மேலும், "இந்த சுரங்கப்பாதைகள் காசா குடிமக்களுக்கான பதுங்கு குழிகள் அல்ல என்றும், ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக்குழுவினர் தொடர்ந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசவும், தாக்குதல்களைத் திட்டமிடவும் பயன்படுத்தும் கட்டுமானங்கள்," என குறிப்பிட்டுள்ளார்.

பரப்பை மதிப்பிடுவது மிகவும் கடினம்

இஸ்ரேலால் ‘காசா மெட்ரோ’ என்றழைக்கப்படும் இந்த சுரங்க கட்டமைப்பின் பரப்பை மதிப்பிடுவது மிகவும் கடினம். ஏனெனில் இது 41 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் மட்டுமே கொண்ட ஒரு பகுதியின் அடியில் பரந்திருப்பதாக நம்பப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த ஒரு மோதலைத் தொடர்ந்து, வான்வழித் தாக்குதல்களில் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான சுரங்க அறைகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறின. ஆனால், ஹமாஸ் தனது சுரங்கப்பாதைகள் 500 கி.மீ. நீளம் கொண்டதாகவும், அவற்றில் 5% மட்டுமே தாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

காசா பகுதியில் இருக்கும் சுரங்கங்கள் அதிக நாட்களுக்குத் தங்கும் வகையிலான வசதிகளோடு கட்டப்பட்டிருக்கின்றன," என இஸ்ரேலின் ரெய்க்மன் பல்கலைக்கழகத்தில் நிலத்தடிப் போர்முறைகள் வல்லுநராக இருக்கும் டாஃப்னே ரீஷ்மண்ட்-பராக் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.   

Leave a Reply