• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உருக்குலைந்த காசா நகரம் - உணவு இல்லாமல் தவிக்கும் மக்கள்

இஸ்ரேல்-ஹமாஸ் படையினருடன் ஏற்பட்டு உள்ள சண்டை இன்று (வெள்ளிக்கிழமை) 7-வது நாளை எட்டியுள்ளது.

ஹமாஸ் படையினர் வசிக்கும் காசா பகுதிகளை இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று இரவு மிக கடுமையான தாக்குதல் நடந்ததால் காசா பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

கடந்த 6 நாட்களில் மட்டும் 6 ஆயிரம் சக்தி வாய்ந்த குண்டுகளை இஸ்ரேல் விமானங்கள் வீசி உள்ளன. இந்த வான்வழி தாக்குதல் காரணமாக காசா பகுதியில் சுமார் 2,500 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி விட்டன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகி உள்ளன.

இதன் காரணமாக காசா நகரம் உருக்குலைந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை இதற்காக குவித்துள்ளது.

காசா நகருக்குள் இஸ்ரேல் தரை படை நுழைந்து தாக்குதல் நடத்தினால் உயிர் சேதம் மிக அதிகளவில் இருக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. இதனால் காசாவில் இருந்து மக்கள் வெளியேறி வருகிறார்கள். இன்று காலை வரை 4.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி விட்டனர்.

காசா பகுதிக்குள் குடிநீர், மின்சாரம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது. இதனால் காசா பகுதியில் வாழும் மக்களின் நிலைமை படுமோசமாக மாறி வருகிறது. ஐ.நா. சபை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு மக்களுக்கு உதவி செய்து கண்காணித்து வருகிறார்கள்.

காசாவில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு முகாம்களை ஐ.நா. சபை ஏற்படுத்தி உள்ளது. அங்கு மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் தஞ்சம் அடைய வரும் மக்களுக்கு முழுமையாக உதவி செய்ய முடியாமல் ஐ.நா. சபை அதிகாரிகள் திணறியபடி உள்ளனர்.

காசாவில் உள்ள உணவு ஆலைகள் இன்று முதல் உணவு விநியோகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் காசாவில் உணவு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உணவுக்காக கடைகளில் அரசு வினியோக பகுதிகளில் குவிந்துள்ளனர்.

இன்று காலை காசாவில் உணவுக்காக மக்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்ற காட்சியை காண முடிந்தது.

காசா பகுதிக்கு உணவு, எரிபொருள், மின்சாரம், மருந்து ஆகியவற்றை வழங்குவதற்கு இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது. பிணை கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை இந்த தடை தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

தற்போது காசாவில் ஹமாஸ் படையினர் கட்டுப்பாட்டில் 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் வீரர்கள் பிணை கைதிகளாக உள்ளனர்.

அவர்களை விடுவிக்குமாறு அரபு நாடுகளும், பாலஸ்தீன பிரதமரும் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அதை ஹமாஸ் படையினர் ஏற்க மறுத்து இருப்பதால் நிலைமை மோசமாகி வருகிறது.

காசாவில் மின்சாரம் இல்லாததால் கடந்த 4 நாட்களாக காசா முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது. மின்சாரம் இல்லாததால் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. சுமார் 10 லட்சம் பேர் தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உணவு, குடிநீர் இல்லாத நிலையில் மருந்தும் இல்லாததால் முதியவர்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

என்றாலும் இஸ்ரேல் இன்னும் தாக்குதலை நிறுத்தவில்லை. இதன் காரணமாக காசா பகுதி மேலும் உருக்குலைய தொடங்கி உள்ளது. இது ஹமாஸ் இயக்கத்தினருக்கு நீண்ட கால பாதிப்பை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.
 

Leave a Reply