• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணீர் விட்டு அழுத இறுகப்பற்று இயக்குனர்

சினிமா

இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (அக்டோபர் 6) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இதில், இயக்குனர் யுவராஜ் தயாளன் பேசியதாவது, படத்தில் ஷ்ரத்தாவின் கதாபாத்திரத்திற்கு அவரை கடைசி சாய்ஸ் ஆகத்தான் நினைத்து வைத்திருந்தேன். காரணம் இதே கதாபாத்திரத்தை கஷ்டப்பட்டு நடிக்கும் ஒரு நடிகையை தேடி கண்டுபிடிக்க முயற்சித்தேன். ஆனால் சூப்பர் என சொல்லும் அளவிற்கு ஸ்ராத்தாவிற்கு இந்த கதாபாத்திரம் அமைந்துவிட்டது படத்தின் மொத்த வசனங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு மட்டுமே 38 சதவீதம் வசனங்கள். படப்பிடிப்பில் அவர் அதை அழகாக பேசியதற்கும் அவருக்கு பொருத்தமாக டப்பிங் குரல் கொடுத்த ஸ்மிருதிக்கும் எனது நன்றி. 

நடிகை அபர்ணதி இப்போது என்னை எவ்வளவு புகழ்ந்து பேசுகிறார். ஆனால் என்னை டார்ச்சர் பண்ணிய நடிகை என்றால் அது அவர் தான். அவர் காலில் மட்டும் தான் விழவில்லை. அந்த அளவுக்கு கெஞ்சினேன். நான் எந்த காட்சியை படமாக்குகிறேனோ அந்த மூடிலேயே இருக்க விரும்புவேன். ஆனால் அவர் சீரியஸான காட்சியில் நடித்துவிட்டு வந்து என்னிடம் ஜாலியாக பேசி மூடை மாற்ற முயற்சி செய்வார். ஆனால் சானியா ஐயப்பனை பொறுத்தவரை என்ன காட்சி எடுக்கிறோமோ அதே மூடில் இருப்பார் அவர் அழும்போது நானும் அழுவேன்.

விதார்த்தம் நானும் 13 வருடங்களுக்கு முன்பே ஒரு படத்தில் இணைந்து பணியாற்றினோம். பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் தான் வடிவேலுவின் படம் எனக்கு வந்தபோது வேறு வழியின்றி அந்தப்படத்தை கைவிட நேர்ந்தது. விதார்த்தும் அதை பெரிய மனதுடன் ஒப்புக்கொண்டு என்னை அனுப்பி வைத்தார். அந்த பெருந்தன்மைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த படத்தை அவருக்கு கொடுத்திருக்கிறேன்.

ஸ்ரீ என்னிடம் உதவி இயக்குனராக வேலை பார்க்கத்தான் வந்தார். அதன்பிறகே இதில் நடிக்க ஒப்புக் கொண்டார். இப்படத்தில் நடிக்கும் போதே நான் எவ்வளவு கெட்டவனாக இருந்திருக்கிறேன் என பெர்சனல் ஆகவே ஃபீல் பண்ணி பேசுவார். இப்படம் பார்த்துவிட்டு அவரை வைத்து ரொமான்ஸ், லவ் படம் எடுக்கலாம் என யாரும் நினைக்காதீர்கள். லவ் சீனை பொறுத்தவரை அவருக்கு நடிக்கவே தெரியாது. யாராவது அவரை வைத்து லவ் படம் எடுக்கதா இருந்தால் என்னிடம் கேட்டு விட்டு படம் பண்ணுங்கள். அந்த அளவிற்கு என்னை வேலை வாங்கி இருக்கிறார் ஶ்ரீ.

விக்ரம் பிரபு நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நிறைய பேர் தயங்கினார்கள். காரணம் இது மல்டி ஸ்டார் படமாக இருந்தது. அது மட்டுமல்ல ஹீரோயினை மையப்படுத்திய படமாகவும் இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால் விக்ரம் பிரபு இந்த படத்தில் நடிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று கூறி ஒப்புக்கொண்டார். அவரும் ஷ்ரத்தாவும் நடிக்க வேண்டிய ஏழு நிமிட காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கினோம்.

அவருக்கும் எனக்கும் சிறுவயதில் இருந்தே ஒரு தொடர்பு இருக்கிறது. என்னுடைய தந்தை தீவிரமான சிவாஜி ரசிகர். சிறுவயதில் சிவாஜியின் படத்தைக் காட்டி இவர்தான் உன்னுடைய தாத்தா என்று சொல்வார். நானும் அவரையே என்னுடைய தாத்தா என்று எல்லோரிடமும் கூறுவேன். பள்ளி தலைமை ஆசிரியரே என் தந்தையை அழைத்து விசாரிக்கும் அளவிற்கு சிவாஜி தான் என் தாத்தா என நம்பினேன். அதன்பிறகு அவர் என் தாத்தா இல்லை என சொன்னதும் அழுதுவிட்டேன். சிவாஜியை பார்த்து வளர்ந்த குடும்பம் எங்களுடையது. சிவாஜி இறந்த அன்று இரவு என் தந்தை ரொம்பவே அழுதார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவின் ஒத்துழைப்பால் இப்படத்தை முழுவதுமாக நான் நினைத்தபடி எடுக்க முடிந்தது. நான் டென்ஷனாக இருந்தாலும் கூட அவர் ரொம்பவே கூலாக விஷயங்களை டீல் செய்தார். நான் சில பேர் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று நினைப்பவர்களில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு சாரும் ஒருவர். இன்று நடப்பதை எல்லாம் பார்க்கும்போது நாளை தான் என் படம் ரிலீஸ் ஆகிறது என்பது போல உணர்கிறேன்" என்று கூறினார்.

Leave a Reply