• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இணுவில் வீரமணி அய்யர் 

இலங்கை

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த ம. த. நடராஜ ஐயர், சுந்தராம்பாள் தம்பதியினருக்கு 1931 அக்டோபர் 15 இல் இரண்டாவது புதல்வனாகப் பிறந்த வீரமணிஐயர், தனது சிறுவயதுக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், (தற்போதைய இணுவில் இந்துக் கல்லூரி) உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கற்றார். அங்கு படிக்கும்போது சிறந்த மாணவனுக்கான விருதைப் பெற்றவர்.
1996 ஆம் ஆண்டு அவரது மனைவியார் ருக்மணி அம்மையார் காலமானார். என். வீரமணி ஐயர் 2003ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ந்திகதி யாழ்ப்பாணத்தில் காலமானார்.
கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக இந்தியா சென்ற இடத்தில், இசை, நடனம், நாடகம் என்பனவற்றால் கவரப்பட்டு, திருமதி ருக்மணிதேவி அருண்டேல் அவர்களிடம் பரதநாட்டியம்கற்றுக் கொண்டார் , எம். டி. ராமநாதன் இசை  கற்றுக் கொண்டார் , பாபநாசம் சிவன் சாகித்ய குரு  வானவரை தன இசைக் குருவாக ஏற்றார் 
தாய்நாடு திரும்பி, தான் படித்த மானிப்பாய் இந்துக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணி புரிந்தார். சில ஆண்டுகளின் பின்னர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராக இணைந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான இசை,நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார். ஏராளமான சாகித்யங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள்மீதான பாடல்களையும் இயற்றினார்.
72 மேளகர்த்தா இராகங்களிற்கும், 175 தாளங்களிற்கும் இன்னும் இதற்கு மேலாகவும் உருப்படிகளை ஆக்கியுள்ளார். பல இராகங்களின் பெயர்களை முத்திரையமைத்துப் பாடியுள்ளமை இவருடைய ஆக்கங்களின் சிறப்பம்சமாகும்.
கீதம், கீர்த்தனை, பதம், பல்லவி, வெண்பா முதலிய சகல வகை பாடற் துறைகளிலும் கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்ற வீரமணிஐயர் அவர்கள் பல கோவில்களுக்கு ஊஞ்சற்பாக்களும் இயற்றியுள்ளார். சமற்கிருதத்திலும் இவர் பாடல்கள் எழுதியுள்ளார்.
இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில், இணுவில் கந்தசுவாமி கோயில், இணுவில் சிவகாமி அம்மன்,மீது பாடிய பாடல்களின் (கீர்த்தனைகள்) தொகுப்புக்கள் மலேசியா வாசுதேவன், நித்தியஸ்ரீ, மகாநதி ஷோபனா   ஆகியோரால் பாடப்பெற்று ஒலிப்பேழைகள், இறுவெட்டுக்களில் வெளிவந்துள்ளன.
`கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்...' என்று ஆரம்பிக்கும் ஆனந்த பைரவி இராகத்தைப் பல்லவியில் கொண்டமைந்து நான்கு இராகங்கள் முத்திரை அமைக்கப் பெற்ற இவரது இராகமாலிகை கீர்த்தனை தென்னிந்தியப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்களால் பாடப்பெற்று உலகப் பிரசித்தி பெற்றதாகும்.
கர்நாடக இசை, நடனம் ஆகிய இரண்டிலும் டிப்ளோமா (Diploma in Dance & Music) தகைமைகளைக் கொண்டிருந்த வீரமணிஐயர் அவர்கள் தனது அரச பணியின் நிறைவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
யாழ்ப்பாணத்தில் கொழும்புஸ்டூடியோ உரிமையாளர் திரு.அ. குகதாசன் அவர்களின் உதவியோடு இவர் பல புத்தங்களை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அந் நாட்களில் கலைத்துறைக்கும், அவற்றைப் புத்தகமாக அச்சிட உதவும் புளொகுகளை அமைத்து வந்த கொழும்பு ஸ்ரூடியோ, இவருக்குப் பேருதவிகள் புரிந்துள்ளது. அத்தோடு இவர் திரு அ.குகதாசன் அவர்களின் நெருங்கிய நண்பரும் ஆவார்.
இந்தியாவில் கற்றுக்கொண்டிருக்கும் வேளையில் தான் இவரது கலைவாழ்வில் பெரும் திருப்புமுனையான சம்பவம் நடந்தது.திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயம் மீது “மயிலைக்குறவஞ்சி” பாடினார்.
கபாலீஸ்வரரை தலைவராகவும் கற்பகாம்பாளை தலைவியாகவும் வைத்து பாடிய நூலின் முதல் பாடல் “கற்பகவல்லியின் நிற்பதங்கள்” என்ற பாடல் இவருக்கு பெரும் உலக புகழை ஈட்டித்தந்தது.ஆனந்தபைரவி இராகத்தில் அமைந்த இந்த இராகமாலிகை கீர்த்தனையை பிரபல தென்னிந்திய பாடகர் செளந்தரராஜன் அவர்கள் பாடினார்.இப்பாடல் வெளியீட்டில் தென்னிந்தியாவின் பிரபல இசைமேதைகள் இவரை பாராட்டி வாழ்த்தினர். பாபநாசம் சிவன் அவர்கள் இவ்வாறு பாராட்டை தெரிவித்தார் “மயிலைகுறவஞ்சி எனும் சிறிய நூலை இழைத்த அற்புத சிலந்தி நமது வீரமணி”.ஆலய நிர்வாகத்தினர் இப்பாடலை ஆலய கருங்கல்லில் “இப்பாடலை எழுதியவர் யாழ் மண்ணை சேர்ந்த வீரமணி ஐயர்” என இட்டனர். அன்று யாழ்மண்ணின் புகழ் தென்னிந்தியா முழுதும் இப்பாடல் மூலம் ஒலித்தது.இன்று இவ்வாலயத்திற்கு வரும் ஆயிரக்கணக்கானோர் இப்பாடலை பார்வையிட்டும் பாடியும் வருகின்றனர்.
பலாலி ஆசிரியர்கலாச்சாலையில் கற்பித்த காலத்தில் பக்கத்தில் தோட்டம் காணப்பட்டது.அங்கு வெங்காயச்செய்கையில் சில பெண்மணிகள் ஈடுபட்டு வந்தனர்.அவர்கள் வெங்காயம் விதைத்து அதை பிடுங்கி கூடையில் போட்டு தலையில் சுமந்து நடைபயிலும் காட்சி இவரை நன்றாக கவர ஒரு முறை அவர்களை பார்த்தவண்ணமே மனதுக்குள் பாடல்வரி எழுதி
மெட்டுப்போட்டபடி நடந்து சென்று மின்கம்பத்தில் மேதி நெற்றியில் சிறு காயத்தோடு வீடு திரும்பினாராம். அதன் பின் அப்பாடலை மாணவர்களுக்கு கற்பித்து மேடையேற்றி வெற்றியும் கண்டார்.இச்சம்பவம் இவர் கலைமேல் எவ்வளவு மயக்கம் கொண்டிருதார் எனபதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
“கற்பகவல்லி நின் பொற்பதங்கள்” என்னு பாடல் பாட ஒரு கதை உண்டு.
இவர் இந்தியாவிலே கற்றுக்கொண்டு இருந்தபோது தன் மேற்படிப்பிற்காக பணம் தேவைப்பட்டது.வழமையாக பணம் அனுப்பும் அண்ணனும் அனுப்பவில்லை.அடுத்தநாள் 12 மணிக்குள் பணம் செலுத்தி ஆக வேண்டும்.ல்லி
மிகவும் மனமுடைந்தவர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் மனமுருகி இயற்றிய பாடலே“கற்பகவல்லி நின் பொற்பதம்” ஆகும்.இந்த பாடலை கேட்ட பின் அய்யரின்  திறமையை மெய்ச்சிகலாச்சேத்திரா ஆசிரியர்கள் இவருக்கு மேற்படிப்புகளை இலவசமாகவே கற்பித்தனாராம்.

ஒரு முறை ஒரு தலைப்பில் நான்கு கதைகள் எழுதவேண்டி சந்தர்ப்பம் ஏற்பட்டது.ஒரே தலைப்பில் நான்கு கதைகள் எழுதுவது என்பது இலகுவான காரியம் அல்ல.ஒருவாறு மூன்று கதைகள் எழுதிவிட்டார்.நான்காவது கதை நீண்டநேரம் ஜோசித்தும் வரவில்லைஉடனே வேட்டியை மடித்து “சண்டி கட்டு” கட்டிய படி ஜோசித்தவாறே பரராஜசேகரப்பிள்ளையார் ஆலய வீதியால் நடந்து சென்றார். வீதியில் சென்ற இளைஞன் “என்ன் ஐயா ஜோசனை” என்று கேட்ட “ஒண்டு இல்லையடா மோனே” என்று சொல்லி விட்டு உடனே வீடு திரும்பி நான்காவது கதையையும் எழுதி முடித்தாராம். அதன் பின் நான்கு கதைகளுக்கும் பரிசு கிடத்ததாம்.
மேலும் இவர் பேச்சிலே குறும்புதனமும்,குழந்தை தனமும் மிக்கவராக காணப்பட்டார்.அயல்வீட்டு சிறு பிள்ளைகளுக்கு இலவசமாக சங்கீத,நடன வகுப்புகள் கற்றுக்கொடுப்பார்.கிருஷ்ணரே இவருக்கு பிடித்த தெய்வமாகும். நெற்றியில் நாமத்துடன் கோவில் வீதியில் அடிக்கடி தென்படுவார். வைகுண்ட ஏகதசி வேளையில் இசைகச்சேரி செய்வார் ஆலயத்தில்.
மேலும் தன்னிடம் கற்கவரும் மாணவர்களை தன் பிள்ளை போல நினைத்து கல்விஊட்டுவார்.சிறுவர்,சிறுமியர் மீது அன்பாக பேசி பழகுவார்
ஒரு சிறிய மனவேதனை ஒன்று எப்போதும் பற்றியவண்ணம் உள்ளது. எத்தனையோ சாதனைகள் செய்து சரித்திரம் படைத்து விருதுகள் வாங்கி எம் மண்ணை பெருமைப்படவைத்த கலைஞனை நினைவுகூரும் விதமாக ஒரு மிகப்பெரிய கலைவிழா எடுக்கப்படுவதில்லை.ஆரம்பத்தில் ஒருமுறை நினைவுகூரல் இடம்பெற்று இருப்பினும் அதன் பின் இடம்பெறாதது மன்வேதனைக்குரியது. இந்தியாவில் தியாகராஜ ஆராதனை எவ்வளவு சிறப்பாக நடக்கின்றதோ அதே போல நம் மண்ணில் வீரமணி ஐயரையும் நாம் நினைவுகூரவோண்டும்.அவரின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவேண்டும் என அனைவரிடமும் தாழ்மையால கேட்டுக்கொள்கிறேன்.
எத்தனையோ புத்தி ஜீவிகளின் கலைஞர்களின் சரிதங்கள் புத்தகமாகவேனும் பதிப்பிக் கப்படல் வேண்டும் 
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா!(கற்பக வல்லி)
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
(கற்பக வல்லி)
ராகம் : ஆனந்த பைரவி
நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்
நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா!
(கற்பக வல்லி)
ராகம் : கல்யாணி
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்
நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!
(கற்பக வல்லி)
ராகம் : பாகேஸ்ரீ
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா!
(கற்பக வல்லி)
ராகம் : ரஞ்சனி
அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் – அருள்
தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா!
(கற்பக வல்லி
நன்றி
மாணிக்கவாசகர் வைத்தியலிங்கம்
எழுத்துருவாக்கம்

 

Leave a Reply