• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐ.நா சபையில் ஒலிக்க வேண்டிய பாடலை எழுதியுள்ளேன்- வைரமுத்து

சினிமா

இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜென்டில்மேன்-2'. இப்படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கிறார். இப்படத்தில் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா சக்ரவர்த்தி நடிக்கிறார். கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 9) சத்யா ஸ்டுடியோவில் துவங்கியது. தமிழக தகவல் ஒளிபரப்பு மற்றும் செய்தித்துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதன் ஸ்விட்ச் ஆன் செய்ய, எம்.ஜி.ஆர்-ஜானகி காலேஜ் மற்றும் சத்யா ஸ்டுடியோ தலைவர் டாக்டர்.குமார் ராஜேந்திரன் கிளாப் அடிக்க, வைரமுத்து ஆக்ஷன் சொல்ல படபிடிப்பு ஆரம்பமானது. முதல் காட்சியில், நாயகன் சேத்தன், நாயகி நயந்தாரா சக்ரவர்த்தி பங்கு பெற்றனர்.

இப்படம் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியதாவது, "ஐ.நா சபையில் ஒலிக்க வேண்டிய ஒரு பாடலை இந்த படத்தில் எழுதி இருக்கிறேன். புவி வெப்பமாதலில் இந்த உலகம் உருகப்போகிறது. புவி வெப்பமாதலை தடுப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய முதல் செய்தி பூமியில் மரம் நடுதல். அந்த மரம் நடுதலை தான் அப்துல்கலாம் முன்மொழிந்தார். உலகம் வழி மொழிந்தது. என் கவிதைகளும் பாடல்களும் மரம் நடுவதை அதிகமாக வற்புறுத்தியிருக்கின்றன. இந்த படத்தில் ஒரு பரதநாட்டிய பாடலுக்கு மரம் நடுவதற்கு ஒரு பாட்டு எழுதியுள்ளேன். அந்த பாட்டு எல்லா கல்லூரிகளிலும் மாணவிகள் இனி ஆடுவார்கள் என்று நிச்சயமாக கருதுகிறேன்" என்று பேசினார்.

Leave a Reply