• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடாளுமன்ற உறுப்பினர் வினோவிற்கு அழைப்பாணை

இலங்கை

எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்திற்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் பூசை வழிபாடுகளுக்காக சென்ற பௌத்த குருமாரின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவமானப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சில பிக்குகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டுக்கமைவாக முல்லைத்தீவு பொலிசாரினால் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் உட்பட பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு வழக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் குறித்த வழக்கு தொடர்பாக எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு முதன் முதலாக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply