ஒரு மில்லியன் மக்களுக்கான உணவு தானியங்களை ஏவுகணையால் சிதைத்த ரஷ்யா
உக்ரைன் தானிய கிடங்குகள் மீது ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் இதுவரை ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு ஆண்டிற்கான உணவு சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பின்னர் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் தானிய கிடங்குகள், துறைமுகங்கள், மற்றும் கப்பல்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தனித்தனியான 26 தாக்குதல்களில் 280,000 டன் தானியங்களை ரஷ்யா சேதப்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கான சரக்கு கப்பல் ஒன்றை ஏவுகணையால் ரஷ்யா தாக்கிய நிலையில், அது உக்ரைனால் முறியடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றி பெற முடியாத ஒரு போரினை புடின் வெற்றியடைய வேண்டும் என முயற்சித்து வருகிறார் எனவும், உணவு தானிய கிடங்குகள் மீதான ஏவுகணை தாக்குதல் அவர் எவ்வளவு அவநம்பிக்கையானவர் என்பதை காட்டுவதாக குறிப்பிடுகின்றனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு முன்னர், உலகமெங்கும் 400 மில்லியன் மக்களுக்கு உக்ரைன் உணவளித்து வந்ததாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, உணவுக்கு பதிலாக ஆயுதங்களை விநியோகிக்கும் முடிவுடன் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ல் கடைசியாக இந்த இரு தலைவர்களும் சந்தித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.