• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெனிவாவில் எதிரொலித்த காணி அபகரிப்பு, புதைகுழி அகழ்வு விவகாரங்கள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையின மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவது குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க மற்றும் கனேடியப் பிரதிநிதிகள், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் உரியவாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. இங்கு ஐ.நா மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பின் உரையைத் தொடர்ந்து ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் உரையாற்றினர்.

பேரவையில் கருத்து வெளியிட்ட அமெரிக்கப்பிரதிநிதி, இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்பதாகக் குறிப்பிட்டதுடன் ஊழல் ஒழிப்புச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டமை, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டமை உள்ளடங்கலாக இலங்கையால் முன்னெடுக்கப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகளைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

இருப்பினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையின மக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்படும் சம்பவங்கள் குறித்து கரிசனையை வெளிப்படுத்திய அவர், பயங்கரவாதத்தடைச்சட்டம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் மீளவலியுறுத்தினார்.

அதேபோன்று பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான பொறிமுறையின் ஊடாக கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை பேரவையில் உரையாற்றிய கனேடியப் பிரதிநிதி, இலங்கையின் அண்மையகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் மற்றும் விசாரணைகள் என்பன உரியவாறு முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்திய அவர், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்குரிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைத்தல் மற்றும் பால்புதுமையின சமூகத்தினரது உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையிலான சரத்துக்களை நீக்கல் என்பன பற்றியும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply