• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வேதனையைப் புரிந்தவர்கள் போராட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் - காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

இலங்கை

பாதிக்கப்பட்ட தரப்பினரின் வேதனையைப் புரிந்து கொண்ட அனைவரும் போராட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்தார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இராணுவத்திடம் உறவுகளை கொடுத்து உயிர் இருக்கா? இல்லையா? என்ற திண்டாட்டத்தின் மத்தியில் தான் போராட்டத்தை மேற்கொள்கிறோம்.

எங்களுக்கான விடுதலைக்காக தொடர்ச்சியாக காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் போராட்டத்தை மேற்கொண்டு எமது உறவுகள் இதுவரை கிடைக்கவில்லை , எங்களுக்கான நீதி வேண்டும் என சர்வதேசத்திற்கு காட்டி வருகின்றோம்.

பாதிக்கப்பட்ட தரப்பாக நாங்கள் வீதிகளில் நின்று போராடுவது சிலருக்கு வேடிக்கையாகவும் , நகைச்சுவையாகவும் இருப்பது மனவருத்தத்திற்குரிய விடயம்.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு என்ன வேதனை என புரிந்து கொண்டால் அனைவரும் குறித்த போராட்டத்திற்கு வருவீர்கள்.

நாங்கள் ஒவ்வொருவரையும் இராணுவத்திடம் கொடுத்து உயிர் இருக்கா? இல்லையா? என்ற திண்டாட்டத்தின் மத்தியில் தான் போராட்டத்தை மேற்கொள்கிறோம்.

பணத்திற்காகவோ, ஆதரவுக்காகவோ இல்லை எங்களுடைய உறவுகள் எமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் கண்ணீர் வடித்து கண்ணீருடன் தான் போராடி கொண்டிருக்கின்றோம்.

அனைவரும் சேர்ந்து குறித்த போராட்டத்திற்கு வர வேண்டும் என கேட்பதோடு 30 ஆம் திகதி போராட்டத்திற்கு செல்ல வேண்டிய வாகன ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிலாவத்தை, விசுவமடு , மாங்குளம் ஆகிய இடங்களில் இருந்து காலை 6 மணிக்கு பேருந்துகள் புறப்பட உள்ளன அத்தோடு குறித்த போராட்டமானது ஓஎம்பி அலுவலகத்திற்கு எதிரான போராட்டமாகும்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது போராட்டம் இருக்கும் என்பதோடு தேசியத்திற்கு பயணிக்கும் அனைத்து உறவுகளையும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு கேட்டு கொள்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply