• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு

இலங்கை

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு விவகாரங்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அமைச்சரவையில் 2023 ஜூலை 01ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பரிந்துரையின் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதிகளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்குப் பயன்படுத்த அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த முனைவதன்மூலம் குறித்த நிதியங்களில் கணக்குகளைக் கொண்டுள்ள சுமார் 25 இலட்சம் உழைக்கும் வர்க்க அங்கத்தவர்களின் ஓய்வூதியச் சேமிப்பினை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்த அரசாங்கம் முயல்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையின்படி இந்த உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் நுPகுஃநுவுகு கணக்குகளின் மீது சுமத்தப்படும் போது அனைத்து ஊழியர்களினதும் சேமிப்புக்களில் இருந்தும் அரைவாசித்தொகை எதிர்வரும் 16 வருட காலப்பகுதியில் இல்லாமற் போகும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக அரச ஊழியர்களின் ஓய்வூதிய நிதியையும் இவ்வாறு கையாள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைச் சங்கம் உள்ளிட்டவை இணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதில், வடமாகாண சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் சங்கம், வடமாகாண கால்நடை போதானாசிரியர் சங்கம், தபால் தொலைதொடர்பு சேவை உத்தியோகத்தர் சங்கம், வடமாகாண அரச சாரதிகள் சங்கம், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டிருந்தன.

Leave a Reply