• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆரை மன்னனாக்கிய திரைப்படம்!

சினிமா

தமிழ் சினிமாவில் வரலாற்றுப் படங்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு. ஆரம்ப காலத்தில் இருந்து சமீபத்திய ‘பொன்னியின் செல்வன்’ வரை பல படங்கள் இந்த லிஸ்ட்டில் இருக்கின்றன. அதில் ஒன்று, எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கி, இரண்டு வேடங்களில் நடித்த ‘நாடோடி மன்னன்’.

பிராங் லாயிட் இயக்கிய ‘இஃப் ஐ வேர் கிங்’ (If I WereKing) என்ற அமெரிக்க வரலாற்றுப் படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு அது போல படம் பண்ண ஆசை. இதை ஆர்.எம்.வீரப்பன், வித்வான் வே.லட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகியோரிடம் தெரிவித்தார் . ரிச்சர்ட் தோர்பே-வின் ‘தி பிரிசனர் ஆஃப் ஜெண்டா’ படத்தை (The Prisoner of Zenda)யும் மார்லன் பிராண்டோ நடித்த ‘விவா ஸபாடா’ (Viva Zapata) படத்தையும் பார்க்கச் சொன்னார். இந்த 3 கதைகளின் பாதிப்பில் உருவானதுதான் ‘நாடோடி மன்னன்’.

2 வேடங்களில் எம்.ஜி.ஆர் நடிக்க, பானுமதி, எம்.என்.ராஜம், சரோஜாதேவி, வீரப்பா, நம்பியார், சந்திரபாபு என பெரும் நட்சத்திரப் பட்டாளம் படத்தில். சரோஜாதேவி நாயகியாக அறிமுகமான படம் இது.எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு கண்ணதாசனும் ரவீந்தரும் வசனம் எழுதியிருந்தனர். இதன் படப்பிடிப்பில் பானுமதிக்கும் எம்.ஜி. ஆருக்கும் நடந்த மோதல் அப்போது பரபரப்பு, நியூஸ்.

ஒரு கட்டத்தில் படப்பிடிப்பில் ஒரே காட்சிக்கு பல டேக்குகள் எடுக்கப்பட, எப்போதும் ஒரே டேக்கில் ஓகே வாங்கும் பானுமதிக்கு இது பிடிக்கவில்லை. இந்தக் கோபத்தால் படத்தில் இருந்து அவர் விலகுவதாக அறிவிக்க, சரி என்ற எம்.ஜி.ஆர், அவர் இறந்து போவது போல் காட்சியை மாற்றிவிட்டார். இந்தப் படத்தின் சிறப்புகளில் ஒன்று, முதல் பாதி கருப்பு வெள்ளையிலும் கன்னித்தீவு கதையை கேவாகலரிலும் படமாக்கி இருப்பார்கள்.

சந்திரபாபுவின் காமெடி, பாடல்கள், காதல் காட்சிகள் வீரப்பாவுக்கும் எம்.ஜி.ஆருக்குமான ஆக்ரோஷமான வாள் சண்டை என மொத்தப் படமும் ரசிகர்களை அப்படியே கட்டிப்போட்டன திரையரங்குகளில்.

‘நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறீர்கள், மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன் நான்’, ‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு. நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை’ என்ற எம்.ஜி.ஆர். பேசும் வசனங்கள் பெரிதும் ரசிக்கப்பட்டன.

‘பாடுபட்டா தன்னாலே’, ‘சம்மதமா நான் உங்கள்கூட வர சம்மதமா’, ‘செந்தமிழே வணக்கம்’ ஆகிய பாடல்களும் சுப்பையா நாயுடு இசையில், ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘தடுக்காதே என்னை தடுக்காதே’, ‘சும்மா கிடந்த நிலத்தை’, ‘கண்ணில் வந்து மின்னல் போல்’ உட்பட பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன.

இந்தப் படத்துக்கான அப்போதைய பட்ஜெட் ரூ.18 லட்சம். ‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன், இல்லையேல் நாடோடி’ என்று அறிவித்துவிட்டு படத்தை வெளியிட்டார் எம்.ஜி.ஆர். படம் மெகா ஹிட். கூட்டம் கூட்டமாக பெரும் கொண்டாட்டமாகக் கொண்டாடி தீர்த்தார்கள் ரசிகர்கள். ஒரு கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி கொட்டிக் கொடுத்தது இந்தப் படம்.எம்.ஜி.ஆருக்கும் தமிழ் சினிமாவுக்கும் திருப்புமுனை தந்த இந்தப்படம், இதே நாளில்தான் (ஆக.22.1958) வெளியானது. 65 வருடம் முடிந்து 66-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது

Courtesy
Tamil  Hindu

Leave a Reply