• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியாவில் 187 பேருக்கு உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு

இலங்கை

சிங்கப்பூர் மகாகருண பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் 187 பேருக்கான உதவித் திட்டங்கள் நேற்று முன்தினம் (22)  வழங்கி வைக்கப்பட்டன. வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள பௌத்த பொது நோக்கு மண்டபத்திலேயே  குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் முகமாக சிங்கப்பூரில் அமைந்துள்ள மகாகருண பௌத்த அமைப்பின் நிதி உதவியில் 62 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் பணம் என்பனவும், 60 கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், 65 குடும்பங்களுக்கு தேவையான வாழ்வாதாரப் பொருட்கள் என்பனவும்  இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை தேசிய கீதம் மற்றும் சிங்கப்பூர் தேசிய கீதத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த 15 இற்கும் மேற்பட்ட பௌத்த சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே, மதத்தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் எனப் பலரும்  இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த 86 மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோருக்கும் குறித்த அமைப்பினால் உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply