• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழ் இளைஞன்! 

தமிழ்நாடு

தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா, செஸ் உலகக்கோப்பை இறுதி போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து இந்தியாவுக்காக செஸ் உலகக்கோப்பையில் களமிறங்கியுள்ளார்.

உலக செஸ் இரசிகர்கள் மத்தியில் மேக்னஸ் கார்ல்சன் என்றாலே ஒருவித புத்துணர்ச்சி பெருகிவிடும். பிரக்ஞானந்தா, அத்தகைய முதன்மை செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு முதல் இரண்டு சுற்றுகளையும் டிராவில் முடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது டை-பிரேக்கர் சுற்றில் வெற்றி வாகை சூடி கோப்பையைக் கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு உலகளவில் எழுந்துள்ளது. இது இந்திய செஸ் இரசிகர்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இறுதி சுற்றின் மூன்றாவது போட்டி இன்று(24.08.2023) அஜர்பைஜானில் நடைபெறவுள்ளது.

இறுதி போட்டி

பதினெட்டு வயதான பிரக்ஞானந்தா, திங்கட்கிழமையன்று டை-பிரேக்கரில் உலகின் 3ஆம் நிலை வீரரான ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். மேக்னஸ் கார்ல்சன், நிஜாத் அபாசோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் 32 வயதான மேக்னஸ் கார்ல்சன் விளையாடுவது இதுவே முதல்முறை.

இந்த மாத தொடக்கத்தில்தான் 18 வயதை எட்டிய பிரக்ஞானந்தா, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் மிக இளம் வயதினர் ஆவார்.

உலக சாம்பியன் பட்டத்திற்கான சவாலை தீர்மானிக்க அடுத்த ஆண்டு நடைபெறும் கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற உலகின் மூன்றாவது இளைய நபர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

கார்ல்சன் மற்றும் அமெரிக்க செஸ் மேதை பாபி ஃபிஷ்ஷர் இருவரும் 16 வயதாக இருந்தபோது இந்தப் போட்டிக்குத் தகுதி பெற்றார்கள்.

முன்னாள் உலக சாம்பியன்களின் வாழ்த்து

பிராக் என்று செஸ் உலகில் பிரபலமாக அறியப்படும் பிரக்ஞானந்தா, இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய செஸ் வீரர்களில் ஒருவர்.

இந்த விளையாட்டின் வரலாற்றிலேயே இளைய சர்வதேச செஸ் மாஸ்டர் ஆனபோது அவருக்கு 10 வயதுதான். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 2018ஆம் ஆண்டில் அவர் உலகின் இரண்டாவது இளைய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

பட மூலாதாரம்,FIDE இந்த விளையாட்டின் வரலாற்றிலேயே இளைய சர்வதேச செஸ் மாஸ்டர் ஆனபோது அவருக்கு 10 வயதுதான். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டில் அவர் உலகின் இரண்டாவது இளைய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

கடந்த ஆண்டு, ஆன்லைன் ரேபிட் போட்டியான ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸில் கார்ல்சனை அவர் தோற்கடித்தார்.

அதுமட்டுமின்றி, நார்வே கிராண்ட்மாஸ்டரை தோற்கடித்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தாவையே சேரும். செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு செஸ் உலகக்கோப்பையின் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியரும் இவரே.

பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியபோது, அவருக்கு விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் முன்னாள் உலக சாம்பியன்களான சூசன் போல்கர், கேரி காஸ்பரோவ் ஆகியோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திங்கட்கிழமையன்று தனது வெற்றி குறித்து பேசிய பிரக்ஞானந்தா, “கார்ல்சனுக்கு எதிராக விளையாடுவேன் என எதிர்பார்க்கவில்லை. நான் எனது சிறந்த விளையாட்டைக் கொடுக்க முயல்வேன், பிறகு போட்டி எவ்வாறு செல்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பேன்,” என்று கூறினார்.

செஸ் உலகை கலக்கும் பிரக்ஞானந்தா யார்?

சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, நெற்றியில் பட்டை, எண்ணெய் வைத்து வகுடெடுத்து வாரிச்சீவப்படாத தலைமுடி, அமைதியான முகம். எளிமையான முகத்தோற்றத்துடன் பெருஞ்சாதனைகளுக்கும் மிகச் சிறிய புன்னகையை வெளிப்படுத்துகிறார்.

பிரக்ஞானந்தாவின் சாதனையை இரண்டு வழிகளில் பார்க்கலாம், ஒருபுறம் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வேகமாக முத்திரை பதிக்கிறான்.

இவரது தந்தை ரமேஷ்பாபு போலியோவால் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருபவர்.

தற்போது சென்னை கொரட்டூர் கிளையின் மேலாளராக உள்ளார். இது ஒரு அம்சம்.

பிரக்ஞானந்தாவின் வாழ்க்கையின் மற்றொரு அம்சம் என்னவென்றால், அவரது நான்கு வயது மூத்த சகோதரி வைஷாலி ரமேஷ் பாபுவும் செஸ் உலகில் நன்கு அறியப்பட்ட வீராங்கனை மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர் என்பதுதான்.

அதாவது பிரக்ஞானந்தாவுக்கு செஸ் விளையாட்டில் முன்னேறுவதற்கான வசதி, வாய்ப்புகளை அவரது சகோதரி வீட்டிலேயே செய்து கொடுத்திருக்கிறார். இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இவர்களின் தந்தை ரமேஷ் பாபுவுக்கும் செஸ் விளையாட்டுக்கும் சம்பந்தமே இல்லை.

அப்படியிருக்க தனது மகன் எப்படி கிராண்ட் மாஸ்டர் ஆனார் என்ற கதையை பிரக்ஞானந்தா 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றபோது அவரது தந்தை பகிர்ந்துள்ளார்.

“எனது மகள் வைஷாலியை செஸ் வகுப்பில் சேர்த்துவிட்டிருந்தேன். அவள் நன்றாக விளையாடினாள். ஆனால், செஸ் போட்டிகளில் பெரிய நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால் நெடுந்தூரம் பயணம் செய்யவேண்டும்.

குடும்ப சூழ்நிலை, பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு என் மகனை செஸ் விளையாட்டில் ஈடுபடுத்தக்கூடாது என்று திட்டமிட்டேன்.” என கூறியுள்ளார்.

பிரக்ஞானந்தா, தனக்கு 4 வயது இருக்கும் போதே அக்காவுடன் செஸ் விளையாட்டில் அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளார்.

தன் வயது சிறுவர்களுடன் நேரத்தைச் செலவிடாமல் செஸ் போர்டில் இருக்கும் அந்த 64 கட்டங்களின் மீது அவர் கொண்டிருந்த காதல் ரமேஷ் பாபுவின் மனதை மாற்றியது.

தன்னைவிட நான்கு வயது மூத்தவரான அவரது அக்காவிடம் இருந்துதான் செஸ் விளையாட்டின் அடிப்படையை பிரக்ஞானந்தா கற்றுக்கொண்டார்.

வீட்டை நிரப்பியுள்ள கோப்பைகள்

சென்னை புறநகரில் நான்கு அறை கொண்ட ரமேஷ் பாபுவின் வீட்டில் அதிகமுள்ள பொருட்கள் கோப்பைகளே.

பெரும்பாலானவை சர்வதேச போட்டிகளில் அக்காவும் தம்பியும் வென்ற கோப்பைகள்.

பிரக்ஞானந்தா, எட்டு வயதுக்கு உட்பட்டோர், பத்து வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலக இளம் செஸ் சாம்பியன்ஷின் போட்டியில் 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

ஐந்து வயதில் இருந்தே செஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியவர், 2016ஆம் ஆண்டு உலகின் இளம் சர்வதேச செஸ் மாஸ்டர் என்ற புகழை அடைந்தார். இன்னும் தொடர்ந்து புகழின் உச்சியை நோக்கி வளர்ந்துகொண்டே இருக்கிறார்.

இந்நிலையில் இன்றைய நாள்(24.08.2023) செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால், அது அவருடைய வெற்றி என்பதுக்கு அப்பால் இந்தியாவின், உலக வாழ் தமிழர்களின் வெற்றியாகவே பார்க்கப்படும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
 

Leave a Reply