சத்யராஜ் தாயார் மறைவு - இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்
சினிமா
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் (94). இவர் கோவையில் வசித்து வந்தார். இவர் வயது மூப்பின் காரணமாக நேற்று (அக்டோபர் 11) மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.
ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் சத்யராஜ், தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் மறைந்த செய்தியறிந்து கோவைக்கு வந்துள்ளார். நாதாம்பாளுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நண்பர் சத்யராஜ் அவர்களின் தாயாரும், இளவல் சிபி சத்யராஜ் அவர்களின் பாட்டியுமான திருமதி. நாதாம்பாள் காளிங்கராயர் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். அன்னையை இழந்து வாடும் அவருக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.