93 வது ஆண்டில் வீரகேசரி......
இலங்கை
இன்று தனது 93 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கும் வீரகேசரி பத்திரிகைக்கு எனது இனிய வாழ்த்துக்கள்......
வீரகேசரி பத்திரிக்கைக்கும் எனக்கும் சுமார் 27 ஆண்டுகால பந்தம் உண்டு....
1987 ஆம் ஆண்டு அதன் ஆசிரியர் பீடத்தில் ஒரு நிருபராக இணைந்து கொண்ட நான் அதன் பின் இரண்டு ஆண்டுகள் பாராளுமன்ற நிருபராகவும் உதவி ஆசிரியராகவும் செயற்பட்டேன்.
பத்திரிக்கையின் விசேடத்துவ பகுதி ஆசிரியராக பணியாற்றிய நான் சில காலம் " இலக்கிய சாளரம் " என்ற பகுதியையும் " பொதிகை " என்ற ஒரு பக்கத்தையும் பொறுப்பாசிரியராக இருந்து செய்து வந்தேன். அவற்றுக்கு மேலதிகமாக " இளைஞர் பக்கம் " "இசையும் கலையும்" " தொடர்பு சாதன உலகு " "வர்த்தகப் பகுதி " ஆகிய சிறப்பு பக்கங்களுக்கு பொறுப்பாசிரியராக இருந்து கடமையாற்றினேன்.
இக்காலத்திலேயே நான் தொழில் புரிந்து கொண்டே சட்டத்தரணியாக படித்து சட்டத்தரணியாக சத்திய பிரமாணம் செய்து கொண்டேன்.
அதன்பின் அங்கிருந்து விலகி " விஜய் " சிறுவர் பத்திரிக்கையில் அதன் ஸ்தாபக பொறுப்பாசிரியராக நான்கு ஆண்டுகள் நடத்தி வெற்றி பெற்றேன்.
அதன்பின் வீரகேசரி மீண்டும் என்னை அழைத்து " சுகவாழ்வு " என்ற சஞ்சிகையை நடத்துமாறு கேட்டுக் கொண்டது. அதனை வெற்றிகரமாக 13 ஆண்டுகள் நடத்தினேன்.
இக்காலத்தில் வீரகேசரியின் மற்றும் ஒரு வெளியீடான சூரியகாந்தி பத்திரிக்கையில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்த " கண்டிச்சீமையிலே -- கோப்பிக்கால வரலாறு " என்ற நூலை இந்நிறுவனம் தானே முன்வந்து பிரம்மாண்டமான பதிப்பாக வெளிக்கொணர்ந்தமையை நன்றி யரிதலுடன் நினைவு கூறுகிறேன்.
இவ்வாறு 27 ஆண்டுகள் வீர கேசரி உடனான எனது வாழ்க்கை வெற்றி என்ற ஏணியில் படிப்படியாக ஏறி இன்று அதன் உச்சிப்படியில் நின்று அடுத்து ஒரு ஏணியில் ஏறுவதற்காக முயற்சிக்கிறேன்.
இப்படி பல வெற்றிப் படிகளில் படிப்படியாக ஏறி இன்றைய நிலைக்கு வர சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தந்த வீரகேசரி அதன் 93 ஆவது அகவையின் போது மீண்டும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நூற்றாண்டுகளைக் கடந்து அது பயணிக்கும் என்பது உறுதி...
Shadagopan Ramiah