• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் அவசியம் - அமைச்சர் சந்திரகாந்தன்

இலங்கை

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால், நாட்டில் நல்லிணக்கம் ஸ்தீரப்படுத்தப்படும் என்று அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான பிழையான கண்னோட்டத்திலிருந்து பெரும்பான்மையின மக்களும் வெளியே வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தெற்கு மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் வடக்கு கிழக்குத் தொடர்பில் கொண்டிருக்கின்ற பார்வைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

குறிப்பாக வடக்கு கிழக்கினைப் பொறுத்தளவில் பிரிவினைவாத மற்றும் முற்போக்குவாத கட்சிகள் காணப்படுகின்றன.

எனினும் தெற்கு மக்கள் குறிப்பாக பெரும்பான்மையின மக்கள் 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது நாட்டைப் பிளவுபடுத்தும் என்ற சிந்தனையை முதலில் அகற்ற வேண்டும்.

இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தினைப் பொறுத்தவரையில் தற்போது ஜனாதிபதிக்கு மிகவும் சவாலான விடயமாகக் காணப்படுவது காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் என்பனவாகும்.

எனவே இந்த விடயத்தில் அனைவருமே ஒரு விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.

நம்பிக்கையீனங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருக்காமல் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

ராஜீவ் – ஜே. ஆர் ஜயவர்தன ஆகியோர் அன்று 13 ஆவது திருத்த சட்டமூலத்தை கொண்டுவந்தபோது அன்றைய அமைச்சரவையில் ஒரு அமைச்சராக அங்கம் வகித்த தற்போதைய ஜனாதிபதி, இந்த அதிகாரப் பகிர்வுப் பிரச்சினைக்கு நிரந்தமான தீர்வை முன்வைப்பார் என்று எனக்கு நம்பிகை இருக்கின்றது.

அதிகாரப் பகிர்வின் மூலம் நாடு துண்டாடப்படும் என்று தெற்கில் உள்ள அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிடும் அதே நேரம், முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும், எமக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு மாத்திரமே வேண்டும் என்றும் வடக்கு, கிழக்கு அரசியல் தலைவர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவை இரண்டுமே இரு தீவிர நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது

எனவே ஜனாதிபதியின் முடிவுகளுக்கு விட்டுக் கொடுப்புக்களுடன் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply