• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவின் மிதக்கும் சிறைக்குள் அனுப்பப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள்

பிரித்தானியாவில் அடைக்கலம் கோரும் மக்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதற்கு பதிலாக தற்போது விவாதத்திற்குரிய மிதக்கும் குடியிருப்பில் முதல்முறையாக அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக 15 பேர்கள் குறித்த மிதக்கும் சிறை என விமர்சிக்கப்படும் அந்த குடியிருப்பில் அனுமதித்துள்ளனர். 220 படுக்கையறைகள் கொண்ட அந்த மிதக்கும் குடியிருப்புகளில் இனி எவரையும் அனுப்பாதவகையில் தாங்கள் நடவடிக்கை எடுக்க இருப்பதாக சட்டத்தரணிகள் குழு தெரிவித்துள்ளது.
  
கடந்த ஓராண்டு மட்டும் புகலிடக்கோரிக்கையாளர்களை தங்கவைக்கும் செலவு 1.9 பில்லியன் பவுண்டுகளை எட்டிய நிலையில், மிதக்கும் குடியிருப்புகளை உருவாக்க ரிஷி சுனக் நிர்வாகம் திட்டமிட்டது.

ஆனால் அந்த திட்டத்திற்கு பலவேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதிக பொருட்செலவு, கொடூரமான செயல், மனிதத்தன்மையற்றது என விமர்சித்திருந்தனர். மட்டுமின்றி, தீயணைப்புத்துறை சார்பில், அது ஒரு மரணப்பொறி எனவும் குற்றஞ்சாட்டியிருந்தது.

அத்துடன், புகலிடக் கோரிக்கையாளர்களின் உளவியல் சிக்கல்கள், உடல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் வேறு தனிப்பட்ட காரணங்களை பட்டியலிட்டு, உள்விவகார அமைச்சகத்திற்கு எதிராக பல்வேறு சட்ட நடவடிக்கைகள் பாய்ந்தது.

இந்த நிலையில், அந்த மிதக்கும் சிறைக்குள் அனுப்ப முயன்ற 20 புலம்பெயர் மக்களை தடுத்து நிறுத்தியதாக தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. 15 பேர்கள் மட்டும் தற்போது அந்த மிதக்கும் குடியிருப்பில் சென்றுள்ளனர்.

இவர்கள் மூன்று முதல் 9 மாதங்கள் வரையில் தங்கவைக்கப்படுவார்கள். இவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றே கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் வரையில், பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள 50,546 பேர்கள் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், Bibby Stockholm படகில் இந்த வார இறுதிக்குள் 500 பேர்களை தங்க வைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமைச்சர் Sarah Dines தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் மூன்று பகுதிகளில் ஏற்பாடு செய்யபப்ட்டுள்ள மிதக்கும் படகுகளில் இலையுதிர் காலத்திற்குள் 3,000 புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளனர். 

Leave a Reply