• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனப்பெண்ணுக்கு நாவலப்பிட்டிய இளைஞர்கள் செய்த மோசமான செயல்

இலங்கை

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி உடரட மெனிகே ரயிலில் பயணித்த போது சுற்றுச்சூழலை வீடியோ எடுத்த சீனப் பெண் ஒருவர் மோசமான சம்பவம் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளார்.

ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இருந்த மூன்று இளைஞர்கள் அவரது கையடக்க தொலைபேசியை திருடுவதற்காக தடியால் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் சீன பெண்ணின் தொலைபேசியில் பதிவாகியுள்ளதுடன் அவரது கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

லியு குயின் என்ற சீனப் பெண், தனது கணவர் மற்றும் மகளுடன் இலங்கைக்கு விஜயம் செய்து, வீதி வழிகாட்டி ஒருவருடன் எல்ல ரயில் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

நாவலப்பிட்டி, இங்குருஓயா ரயில் நிலையத்தை அடையவிருந்த போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எவ்வாறாயினும், நாவலப்பிட்டி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரண்டு சந்தேகநபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இங்குருஓயா பிரதேசத்தை சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்கள் எனவும், அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் எனவும், போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட பின்னர், சீனப் பெண் பொலிஸாருக்கு அனுப்பிய வாட்ஸ்அப் பதிவு பின்வருமாறு,

‘நானும் எனது குடும்பத்தினரும் இலங்கையை மிகவும் நேசிக்கிறோம். அவ்வப்போது நடக்கும் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் இலங்கை பற்றிய எனது நல்ல எண்ணங்களை பாதிக்க விடமாட்டேன். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு என்றென்றும் நிலைத்திருக்கும்’ என பதிவிட்டிருந்தார்.

Leave a Reply