• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுகாதாரசேவை மீதான நம்பிக்கையை ஜனாதிபதி மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் - ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கை

இலவச சுகாதார சேவை மீது மக்களுக்கு இல்லாமல் போயுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலவச சுகாதார சேவையிலிருந்து மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டிய நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.
தரமற்ற மருந்துகளால் நாட்டின் பல உயிர்கள் இல்லாது போயுள்ளன.

இதனால் மக்கள் மத்தியில் இன்று அச்சம் நிலவிவருவதால், வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற முடியாத நிலையில், பொது வைத்தியசாலைகள் மீது மக்கள் மத்தியில் நம்பிக்கை அற்றுப் போவது உண்மையில் மோசமானதொரு விடயமாகும்.

சுகாதார அமைச்சரோ, வைத்தியசாலைக்கு வரும் அனைத்து நோயாளிகளும் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று சர்வசாதாரணமாக கூறியுள்ளார்.

இவருக்கு மக்கள் உயிர் மீது அக்கறையில்லை. ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டும்.

மக்களின் உயிரைப் பாதுகாப்பதோடு, இலவச சுகாதார சேவை மீது மக்களுக்கு இல்லாமல் போயுள்ள நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply