• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கவிஞர் புலமைப்பித்தன்

சினிமா

கவிஞர் புலமைப்பித்தன் பற்றித் தெரியும் ஆனால், இளமையான, அசத்தலான பாடல்களை இயற்றியவரா.
சமீபத்தில் காலமான புலமைப்பித்தன் அவர்கள் குறித்த சிறப்புக் கட்டுரையில், இவர் இயற்றிய பாடல்களைப் பார்த்த பிறகு ‘அட! இவற்றையெல்லாம் இவரா எழுதினார்!‘ என்று வியப்பே மேலிட்டது.
கவிஞர் புலமைப்பித்தன்
கோவை மாவட்டம் பள்ளபாளையத்தில் பிறந்த புலமைப்பித்தன் அவர்களின் இயற்பெயர் ராமசாமி. சிறு வயதிலிருந்தே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
புலமைப்பித்தன் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழைக் கண்டு அசந்த இயக்குநர் கே சங்கர், தன்னைச் சென்னையில் வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார்.
தான் இயக்கிய குடியிருந்த கோயில் படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு யார் கொடுத்த பாடலும் திருப்தியாக வரவில்லை என்று புலமைப்பித்தனை அழைக்கிறார்.
இப்பாடல் நன்றாக வந்தால், உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று கூறிய நிலையில், எழுதிய பாடல் தான் ‘நான் யார் நான் யார் நீ யார்‘.
இப்பாடல் மிகப்பெரிய வெற்றி பெற, இதன் பிறகு வரிசையாக எம்ஜிஆர் படங்களுக்குப் பாடல்கள் எழுதித் திரையுலகில் கவனம் பெற்றார்.
அனைத்துப் பாடல்களும் பெரிய வெற்றி பெற்று பல முன்னணி இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் எழுதினார்.
இக்கட்டுரையை எழுத முக்கியக்காரணமே என்னைப் போலப் பலருக்கு இவர் எழுதிய பாடல்களின் சிறப்புத் தெரியாமலே போய் இருக்குமே என்ற எண்ணத்தில் தான்.
பல பாடல்களை கவிஞர் வாலி எழுதியதாகவே நினைத்து இருந்தேன்.
எம்ஜிஆர், சிவாஜி, கமல் & ரஜினி ஆகிய முன்னணி நடிகர்களுக்குப் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.
எம்ஜிஆர் பாடல்கள் இவருக்கு அடையாளத்தையும், திரையுலகில் வளர்ச்சியையும் கொடுத்துள்ளன.
ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய புலமைப்பித்தன் அவர்களின் சில பாடல்களைக் கூறுகிறேன், நீங்களும் வியப்படைவீர்கள்.
ஓடி ஓடி உழைக்கணும், சிக்கு மங்கு சிக்கு மங்கு, ஒன்றே குலம் என்று பாடுவோம், பாடும் போது நான் தென்றல் காற்று, இன்பமே உந்தன் பெயர் பெண்மையோ, சொர்க்கத்தின் திறப்பு விழா.

உச்சி வகுந்தெடுத்து, பட்டு வண்ண ரோசாவாம், வெண் மேகம் விண்ணிலே வந்து, நிலா அது வானத்து மேலே, நீ ஒரு காதல் சங்கீதம்.
உன்னால் முடியும் தம்பி, புஞ்சை உண்டு நஞ்சை உண்டு, ராத்திரியில் பூத்திருக்கும், கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு, வெள்ள மனம் உள்ள மச்சான், அடி வான்மதி, கல்யாண தேன் நிலா.
அழகிய விழிகளில் அறுபது கலைகளும், இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது, மழை வருது மழை வருது குடை கொண்டு வா, ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்.
ஜாதி மல்லி பூச்சரமே, சங்கீத ஸ்வரங்கள் பாடல்கள் அதிகம் ரசித்து, பல முறை கேட்டவை ஆனால், இவர் எழுதியது என்று தெரியாது.
அழகன் படத்தில் அனைத்துப் பாடல்களுமே அசத்தலாக இருக்கும்.
நான் படித்த பள்ளியில் ஒரு மாணவன் உன்னால் முடியும் தம்பி படத்தின் ‘புஞ்சை உண்டு நஞ்சை உண்டு‘ பாடல் பாடி முதல் பரிசு பெற்றான்.
இவர் எழுதிய மேற்கூறிய பாடல்களைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம், அனைத்து வகைப் பாடல்களையும் எழுதியுள்ளார் என்று.
மேற்கூறியது புலமைப்பித்தன் எழுதிய சூப்பர் ஹிட் பாடல்களில் சில தான், குறிப்பிடாமல் விட்டது ஏராளம்.
சிலரின் சிறப்பை, திறமையை அவர்களின் கடைசிக் காலம் வரை உணராமல் இருப்பது அவர்களுக்கு நாம் செய்யும் அவமரியாதை தான்.
இவர் எழுதிய பெரும்பாலான பாடல்களை இன்றும் ரசித்துக் கேட்டு வருகிறேன். இவர் வரிகளுக்குச் சிறப்பான இசையை வழங்கிய இசையமைப்பாளர்களுக்கு நன்றி.
புலமைப்பித்தன் அவர்கள் மறைந்தாலும், இசை இருக்கும் வரை அவர் நினைவுகளைச் சுமந்து கொண்டு இருக்கும்.

Natarajan Venkatraman

Leave a Reply