கடந்த திங்களன்று மதிய வேளையில் நியூயோர்க் நடுநிலை பாடசாலை மாணவர்கள் பேருந்தில் வீட்டுக்குத் திரும்பிய போது பேருந்து கண்காணிப்பாளரிடம் தவறாக பேசியதுடன் அவரை கொச்சைப்படுத்தும் விதத்திலும் நடந்து கொண்டுள்ளனர். பேருந்து கண்காணிப்பாளராக பணியாற்றிய 68வயது முதிர்ந்த பெண்மணி இந்த விடயம் சர்ச்சையாகக் கூடாது என்பதனால் அனைத்தையும் சகித்துக் கொண்டு இருந்துள்ளார். பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் அனைவரும் பாடசாலையில் ஏழாம்வகுப்பில் பயின்று வருபவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
68 வயதான பெண்மணிக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளதால் அவருக்கு காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் தொடர்பான காணொளி யூரியூப்பில் போடப்பட்டுள்ளது. யூரியூப்பில் காணொளி வெளியான சில நிமிடங்களிலேயே ரொறோண்ரோவைச் சேர்ந்த 25 வயதாகும் மாக்ஸ் சிடொறோவ் என்ற இளைஞர் பெண்மணிக்கு ஆதரவுக்கரம் நீட்ட முன் வந்துள்ளார்.
முதியவர் ஒருவர் சிறுவர்களால் இது போன்று நடத்தப்படுவது மனதை உடைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் சில நாட்கள் இந்த பெண்மணி வேறு இடங்களுக்குச் சென்று உல்லாசமாக பொழுதினைக் களித்து நடந்தவற்றை மறக்க முன்வர வேண்டும் எனவும் அந்த இளைஞர் கேட்டுக் கொண்டுள்ளதுடன் அதற்காக சமூக வலைத்தளம் மூலம் நிதி திரட்டவும் தொடங்கியுள்ளார்.
புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதி திரட்டும் பிரச்சாரத்தில் பலர் பெண்மணிக்கு ஆதரவளித்து நிதி உதவி செய்யத் தொடங்கியதில் ஒரே நாளில் $460,000 பெண்மணிக்கு ஆதரவாகக் குவிந்துள்ளது. யூரியூப்பில் வெளியிடப்பட்ட இந்த காணொளியினை இது வரையிலும் 2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். நிதி சேர்க்கும் பிரச்சாரத்தினை துவங்கிய போது இந்த அளவிற்கு மக்களிடம் இருந்து வரவேற்பு இருக்கும் எனத் தான் கருதவில்லை என்கிறார் மாக்ஸ் சிடொறோவ்.
மாணவர்களால் அவதூறாக பேசப்பட்ட 68 வயதாகும் க்ளினுக்கு 8 பேரக் குழந்தைகள் உள்ளன. 17வருடங்களாக கணவனை இழந்து விதவையாகவும் வாழ்ந்து வருகிறார். தன்னை அவமானப்படுத்தும் வகையில் பேசிய மாணவர்களிடமும் தாயுள்ளத்துடன் நடந்து கொண்டதுடன் , இந்த மாணவர்கள் குறித்து எந்த புகாரினையும் அவர் நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது