திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் போராட்டங்களுக்கு பழக்கப்பட்டவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்கள். அனைத்திந்திய அண்ணா திமுக அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை கண்டித்து அக்கட்சி நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் அதன் நிர்வாகிகள் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக ஆர்வத்துடன் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அமைதியான போராட்டம் என அறிவித்தாலும், அதில் பங்கேற்கும் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அரசு தயாராக இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அனைத்து சிறைகளும் சுத்தம் செய்யப்படுகின்றன; சாப்பாடு தட்டுகள் வாங்கப்படுகின்றன; சீருடைகள் தைக்கப்படுகின்றன என்று பலவகை செய்திகள் வெளியாகின. முத்தாய்ப்பாக, தமிழக சிறைகளில் இடம் போதாது என்பதால் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்ற தகவலை சில நாளேடுகள் அக்கறையுடன் பரப்பின.
போராட்டத்துக்கு ஆயத்தமாகி கொண்டிருந்த தொண்டர்கள் மனதில் பீதியை உண்டாக்க நடத்தப்பட்ட இந்த பிரசாரம் எடுபடவில்லை. கட்சியின் பொருளாளர் சுட்டிக் காட்டியது போல, போராட்டத்தின் இலக்கே ‘சிறைகளை நிரப்புவது’ என்பதால் தொண்டர்கள் மிரளவில்லை. உண்மையில் அவர்கள் 15 நாள் ரிமாண்ட் செய்யப்படுவதை எதிர்பார்த்து தயாராகவே வந்திருந்தனர். மருந்து மாத்திரைகள் தவிர பாய், தலையணை, போர்வை தட்டு, டம்ளர், புத்தகங்கள் போன்றவற்றை உடலோடு அணைத்தபடி காவல்துறை ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளில் ஏறுவதை பார்க்க முடிந்தது.
திருமண மண்டபங்கள், சமூக நல கூடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்ட தொண்டர்களையும் நிர்வாகிகளையும் தொலைதூர நகரங்களில் உள்ள சிறைகளுக்கு அனுப்ப போவதாக அந்த நேரத்திலும் கைபேசி மூலம் குறுந்தகவல் அனுப்பியது ஒரு கூட்டம். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுகவினர் அனைவரையும் விடுதலை செய்ய முன்னிரவில் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளது பொறுப்பான நடவடிக்கை. முறையற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்துவதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். ஆனால் அதை சாக்கிட்டு ஒரு பெரிய கட்சியை அடக்கி ஒடுக்கும் முயற்சி தவறானது மட்டுமல்ல; ஒருபோதும் அது பலன் அளிக்காது.