நோர்வேயிலுள்ள சிறுவர் காப்பகத்தில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன அத்துடன் வெளிநாடுகளைச் சேர்ந்த பிள்ளைகளைப் பராமரிப்பது தொடர்பில் தமது நாட்டு சிறுவர் காப்பகத்திற்கு போதிய அனுபவம் இல்லாதிருப்பதாக நோர்வே சிறுவர் நல விவகார அமைச்சர் (Inge Marte Torkelsen) இங்கே மார்ட்டே டோர்கெல்சன் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து வெளிவருகின்ற அப்டன் போஸ்ட் (Aften Post) என்ற பத்திரிகை நேற்று முன்நாள் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பக விவகாரம் இலங்கை ஊடகங்களின் வாயிலாக சர்வதேச மட்டத்திற்கு வந்துள்ளதையடுத்து தற்போது இவ்விவகாரம் நோர்வே அரசாங்கத்திற்கு நெருவாரங்களை ஏற்படுத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான தகவல்களும் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.இந்நிலையிலேயே நோர்வே நாட்டின் சிறுவர் விவகார அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருப்பதாக அப்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் சிறுவர் காப்பகத்தில் பொறுப்பேற்கப்பட்டுள்ள வெளிநாட்டு சிறுவர்கள் தொடர்பில் அமைச்சின் கவனம் திரும்பியிருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.இது இவ்வாறிருக்க நோர்வே அரச மட்டத்திலுள்ள உயர் அதிகாரிகள் மத்தியிலும் நோர்வே சிறுவர் காப்பக விவகாரம் மற்றும் டொம் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதம் ஆகிய விடயங்கள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.