முள்ளிவாய்க்கால் என்னும் வீரம் விளைந்த நமது மண்ணின் ஒரு பகுதியை எலும்புகளின் இருப்பிடமாக மாற்றிய மகிந்தாவும் அவரது அரசும் அதற்கு துணையாய் நின்ற உலகின் கொடுங்கோல் அரசுகளும் 2009ம் ஆண்டு மே மாதத்தில் நிகழ்த்திய தமிழ் மக்கள் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான நமது போர்க்குணம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
தாயகத்தில் உள்ள நமது உறவுகள் சற்று அடக்கமாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நமது மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் தமிழகம் போன்ற நமது தமிழ் உணர்வாளர்களின் பிரதேசங்களிலும் அநியாயப்படுகொலைகளுக்கு தங்கள் இன்னுயிர்களை இழந்த போராளிகளையும் பொதுமக்களையும் எண்ணி எண்ணி வருந்தும் நமது உணர்வுள்ள உறவுகள் மகிந்தா செய்த மனிதப் படுகொலைகளுக்கு சர்வதேச நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் நிச்சயம் அவருக்கு தகுந்த தண்டனையை வழங்கவேண்டும் என்ற நோக்கில் பல வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். மேற்படி போராட்டத்தின் நோக்கமே மகிந்தா தலைமை தாங்கும் இலங்கை அரசை தண்டித்து அந்த கொடுங்கோல் ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.
இவ்வாறான வேளையில்தான் நமது தாயக மண்ணில் மகிந்தாவின் சிங்கள அரசு மேற்கொண்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்;றங்களுக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம் கடந்த மே மாதம் பதினாறாம் திகதி தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சென்னை கடற்கரையில் மகாத்மா காந்தி சிலைமுன்னிலையில் இடம்பெற்ற இந்த வரலாற்று நிகழ்வில் பல்வேறு கட்சிகளினதும் மற்றும் அமைப்புகளினதும் தலைவர்கள் பங்கேற்றனர்.
2009 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் அப்பாவித் தமிழர்களை இனப்படுகொலைசெய்த இலங்கை அரசின் சர்வதேசம் தகுந்த விசாரணை நடத்த வேண்டுமெனவும் ஈழத்தமிழர்கள் தங்கள் தாயக உரிமையை தீர்மானிக்க ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென கோரியும் உருவாக்கப்பட்டுள்ள இயக்கமானது ஓர் அறவழிப் போராட்டமாகும்.
இதன் துவக்க விழா நெல்லை பாளை ஜவகர் மைதானத்தில் நடைபெற்றபோது கனடிய தமிழர் தேசிய அவையின் உறுப்பினர்களான மோகன் ராமகிருஷஸ்ணன் தேவா சபாபதி கவிதா செந்தில் மற்றும் பிரபா நல்லையா ஆகியோரும் பங்குபற்றினர். இந்த பங்களிப்பு என்பது பாராட்டுதலுக்கு உரியது.
தமிழகத்திலுள்ள 'போர்க்குற்றம்-இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள்' அமைப்பு அங்கு இதனை முன்னின்று நடத்தி வருவது நமது மக்களுக்கு உற்சாகம் தர வேண்டும். தற்போது ஒரு கோடி கையெழுத்து நடவடிக்கை உலகம் முழுவதும் வியாபிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளிலுள்ள மக்கள் அவைகள் இதனை மக்கள் பணியாக கையேற்று செயற்படுத்துகின்றன.
இவ்வாறான ஒரு முக்கிய கடமையை நாம் கனடாவில் இன்று வெள்ளிக்கிழமை நிறைவேற்றவுள்ளோம். உலகில் தமிழ் மக்கள் அத்pகளவு வாழும் இந்த கனடிய மண்ணில் இன்று மாலை நமது கரங்களுக்கு மீண்டும் பணி காத்திருக்கின்றது. இன்றைய தினம் கனடாவிலும் ஏனைய புலம்பெயர்ந்த நாடுகளிலும் அதிகூடிய கையெழுத்துகள் சேகரிக்கும் கடமையுடையவர்கள் நாம். எங்கள் மண்ணுக்காக உயிரைத் தியாகம் புரிந்தவர்களுக்கு நாம் செய்யவேண்டிய தலையாய பணி இது.
நாங்கள் இடுகின்ற ஒவ்வொரு கையெழுத்தும் போர்க்குற்றமும் இனப்படுகொலையும் புரிந்த இலங்கை அரசையும் அதன் ஜனாதிபதியான மகிந்தாவையும் குற்றக் கூண்டில் நிறுத்தி அதற்குரிய தண்டனையை பெற்றுக் கொடுக்கும் அவசியத்தை நாம் உணர்ந்து செயற்படுவோமாக. நமது கைகளின் பலம் முன்னரைப் போல இந்தத் தடவையும் உலகிற்கும் குற்றம் புரிந்தவர்களுக்கு தெரியும் வகையில் செயற்படுவோம்.