ஊடக உரிமை மோசடி செய்து அவதூறு பரப்பினார் என தெரிவித்து பேராசிரியர் ஹுல் மற்றும் தென்னிலங்கை சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியருக்கும் வெளியீட்டாளருக்கும் எதிராக சட்டத்தரணி ரெங்கன் தேவராஜனால் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு 2013 பெப்ரவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2011இல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சண்டே லீடர் பத்திரிகையின் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் சார்பாக நீதிமன்றிற்கு சமூகமளித்திருந்த சட்டத்தரணி தவபாலன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் சண்டேலீடர் பத்திரிகையை பிரிதிநிதித்துவப்படுத்தி இருப்பதாக தெரிவித்திருந்த நிலையிலும் பேராசிரியர் சார்பாக எவரும் எவரும் சமூகமளித்திருக்கவில்லை.
இந்த நிலையில் - பேராசிரியருக்கு வெளிநாட்டு அமைச்சு ஊடாக மற்றுமொரு தடவை அழைப்பாணை அனுப்புமாறு யாழ்.மாவட்ட நீதிபதி ஆனந்தராஜா கால அவகாசம் வழங்கி இவ்வழக்கை 2013 பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார். மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டாலும் பேராசிரியர் நீதிமன்றிற்கு சமூகமளிப்பாரா என்பதில் தனக்கு சந்தேகம் இருப்பதாக சட்டத்தரணி ரெங்கன் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி ஆனந்தராஜா, இந்த வழக்கின் பாரதூர தன்மையை பேராசிரியர் விளங்கிக்கொள்வார் என தான் நம்புவதாகவும், நீதிமன்றிற்கு சமூகமளிக்காமையினால் வரும் விளைவுகள் பற்றி பேராசிரியருக்கு நன்கு தெரிந்திருக்கும் என தான் கருதுவதாகவும் தெரிவித்ததுடன், வழக்கை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைத்தார்.
பேராசிரியர் ஹுல் தீவுப் பகுதி மக்களை இழிவுபடுத்தி பேசினார் எனவும், பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கியமைக்காக சட்டத்தரணி ரெங்கன் தேவராஜனுக்கு எதிராக ஊடகங்களில் அவதூறு பரப்பினார் என்றே இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.