ஆசியாவின் ஊடக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்ற 'வெரிடே ரிசேர்ச்' தனியார் நிறுவனத்திடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பான செய்திகளின் ஆய்வுத்தொகுப்புகளை மாத்திரமே பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
"வெரிடே ரிசேர்ச்" நிறுவனத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் சில ஊடகங்கள் சர்ச்சையான செய்திகளை வெளியிட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்:
'தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக செய்திகள் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களில் வெளிவருகின்றன. அவற்றின் போக்குகளை ஒருமுகப்படுத்தி ஆராய்வதென்பதே சிக்கலான விடயம். இந்நிலையில்தான் ஊடக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்ற ரிசேர்ச் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டோம்.
இவ்வாறான ஒப்பந்தம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மாதம் ஒருமுறை அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறை என்ற ரீதியில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக அனைத்து மொழி ஊடகங்களின் பார்வை பற்றிய தொகுப்பினை எமக்கு இந்த நிறுவனம் வழங்கி வருகின்றது.
இந்த ஆய்வினூடாக தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றி எவ்வாறான அபிப்பிராயங்களை கொண்டிருக்கின்றன என்பது பற்றி அறியக் கூடியதாக இருக்கும்.
இந்த ஆய்வறிக்கையானது எமது கூட்டமைப்புக்கு மாத்திரமேயான பிரத்தியேக ஆய்வறிக்கையாகும். இந்த ஆய்வினை பொதுமைப்படுத்த முடியாது. ஆனால் இதே நிறுவனத்தால் வாராவாரம் வெளியிடப்படுகின்ற ஊடக ஆய்வு பற்றிய சஞ்சிகையினை எவரும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இந்த நிறுவனத்தில் எந்த மொழி சார்ந்தவர்கள் வேலை செய்கின்றார்கள் என்று பார்ப்பதைவிட அவர்களின் ஆய்வு பற்றிய நுணுக்கங்களே எமக்கு தேவையாக உள்ளது. அந்த சேவையை பெறுவதற்காகதான் இவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டோம். சில ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போல திருட்டுத்தனமாக எந்த ஒப்பந்தத்தையும் இந்த நிறுவனத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை.
அண்மையில் கூட வெரிடே ரிசேர்ச் நிறுவனத்தினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இருநாள் பயிற்சி பட்டறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலோனார் கலந்துகொண்டனர்.
அதுமட்டுமல்லாமல் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரத்தியேகமாக இந்த நிறுவனத்தின் உதவியை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்நிறுவனத்தில் இராணுவ புலானாய்வு பிரிவினர் பணிபுரிவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் அந்நிறுவனத்திடம் கேட்டபோது அவ்வாறு யாரும் இந்நிறுவனத்தில் பணிபுரியவில்லை என்று உறுதியளித்தார்கள்' எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.