ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை நிறுவுவதற்குத் தீர்மானித்துள்ள அரசு, இதற்காக முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பது பற்றித் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அதேபோல், எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது முக்கியமான பொறுப்புகளை முஸ்லிம் காங்கிரஸிடம் வழங்குவதற்கும் அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
கிழக்கு மாகாணசபையில் விட்டுக்கொடுப்புடன் கூட்டாட்சியாக மு.காவுடன் இணைந்து செயற்படத் தயாரென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்த ஒரு சூழலில் அரசின் இந்த யோசனை வெளியாகியுள்ளது.
அரசின் இந்தத் தீர்மானம் நேற்றிரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதேவேளை, கிழக்கு ஆட்சியை எவ்வாறு அமைப்பது, மாகாண அமைச்சுகளில் எவரை நியமிப்பது என்பன உட்பட்ட பல விடயங்களை மு.காவுடன் பேச உயர்மட்ட அமைச்சர் குழுவொன்று தயாராகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முதலமைச்சர் பதவி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள்ளேதான் வழங்கப்படவேண்டும் என்ற கொள்கை கட்சியில் இருந்தபோதும் கிழக்கு மாகாணசபை விடயத்தில் அதில் மாற்றங்களைச் செய்ய அரசுத் தலைமை உத்தேசித்திருப்பதாகவும், இது விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் கட்சி உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தி முடிவுகளை எடுக்கும்வரை காத்திருப்பதாகவும் மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றிரவு தெரிவித்தார்.
கப்பல் துறைமுக அமைச்சினை தந்தால் கிழக்கில் அரசுக்கு ஆதரவு! ஹக்கீம் மஹிந்தவுடன் பேரம்
கிழக்கு மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கி அந்தக் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு வழங்க வேண்டுமாயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில கோரிக்கைளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கேட்டுக் கொண்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்சவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஹக்கீம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1. தனது நீதியமைச்சுக்குப் பதிலாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சினை தனக்கு வழங்குதல்
2. வெளிவிவகார பிரிதியமைச்சுப் பொறுப்பைத் தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்குதல்.
3. தனது கட்சியைச் சேர்ந்த நால்வருக்கு ஸ்தானிகர் பதவிகளை வழங்குதல்
போன்ற முக்கிய கோரிக்கைகளையும் ஹக்கீம் முன்வைத்துள்ளார் என்றும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.