வடபகுதியில் தமிழ் மக்களின் குழுமத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சதித் திட்டமே அவுஸ்ரேலிய புகலிடப் பயணங்களாகும். இதற்கு தமிழ் இளைஞர்கள் தொடர்ந்தும் ஏமாறாது தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எஸ். குகவரதன் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் அனைத்தையும் இழந்த தமிழ் சமுகத்தில் எஞ்சியுள்ள இளம் சமூகத்தையும் நடுத்தெருவில் தடுக்க விடுவதே இப்பயணங்களில் இலக்காகும்.
இன்று நாட்டில் நாளிதழ்களிலும், இலத்திரனியல் ஊடங்களிலும் நாம் வாசிக்கும், கேட்கும், பார்க்கும் செய்திகளில் அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் கோரி சட்டவிரோதமாகச் சென்ற குழுவினர் கைது என்பதாகும்.
காலி, நீர்கொழும்பு உட்பட பல பகுதிகளில் இவ்வாறான படகுகள் படையினரால் சுற்றி வளைக்கப்படுகின்றன.
இவ்வாறு பயணிப் போரில் மூவினத்தவர்களும் இருந்தாலும் அதிக எண்ணிக்கையில் வடபகுதி தமிழ் இளைஞர்கள், யுவதிகள், குடும்பஸ்தர்களே காணப்படுகின்றனர்.
படகுகளில் பயணம் செய்த பெரும்பாலான வடபகுதி தமிழர்கள் தமது பணத்தையும் இழந்து சிறைச்சாலைகளில் சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.
வடபகுதி தழிழ் இளைஞர்களை நிர்க்கதியாக்கும் திட்டமிடப்பட்ட நடவடிக்கையே அவுஸ்ரேலிய புகலிடப் பயணமாகும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் வடபகுதி தமிழ் மக்கள் குழுமத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அங்கு பெரும்பான்மை இனத்தவரை குடியேற்றி தமிழ் சமூகத்தை முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கிலேயே அதிகார குழுவொன்று இத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
தமிழ் சமூகத்தை பொருளாதார ரீதியில் முடக்கி மூடர்களாக்குவதன் மூலம் அச்சமூகம் உரிமைகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கும் இதனையே இக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
எமது சமூகம் யுத்தத்தால் அனைத்தையும் இழந்துவிட்டது. எஞ்சியுள்ள இளம் சமூகமும் அழிய வேண்டுமா?
சிந்தியுங்கள். அவுஸ்ரேலிய புகலிடம்' என்ற மாயையில் சிக்கி பணத்தையும் உரிமைகளையும் இழந்து விடாதீர்கள் மாறாக சுயதொழில்கள் அல்லது இலங்கைக்குள் தொழில்களில் ஈடுபடுவபர்கள் இல்லாவிட்டால் சட்ட ரீதியாக வெளிநாடு செல்லுங்கள்.
அவுஸ்ரேலியா புகலிடம் வடபகுதி தமிழர்களை முழுமையாக இல்லாதொழித்து முடவர்களாக்கும் சதித்திட்டமாகும். எனவே தமிழ் இளம் சமூகம் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எஸ். குகவரதன் கோரிக்கை விடுத்துள்ளார்.