கொழும்பில் தற்போது நடைபெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற அமைப்பின் 58 ஆவது உச்சிமாநாட்டில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவும் கலந்துகொள்ளவிருப்பதாக சபாநாயகர் சமல் ராஷபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.நேற்றுக்காலை தமது வாசஸ்தலத்தில் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்து இந்த மாநாடு குறித்து விளக்கமளித்தபோதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:
"உண்மையில் பொதுநலவாய அமைப்பு 1905 ஆம் ஆண்டே ஆரம்பமானது. ஆனால், பொதுநலவாய நாடுகள் என்ற ரீதியில் 1948 ஆம் ஆண்டே இது உத்தியோகபூர்வமாக இயங்கத் தொடங்கியது. அங்கத்துவ நாடுகளின் கல்வி, சுகாதாரம், வறுமை, பொருளாதாரம் போன்ற விடயங்களை இந்த அமைப்பு ஆராயும்.
அந்தவகையில் 'எதிர்காலத்திற்கான சிறந்த பொதுநலவாய அமையத்தை உருவாக்கல்' என்ற தலைப்பில் இங்கு பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற அமைப்பின் உச்சிமாநாட்டை நடத்துவது எமது நாட்டுக்கே பெருமையளிக்கின்றது.
இந்த மாநாடு வெற்றிபெறுவதற்கு ஊடகங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும். இங்கு சுமார் 800 முக்கிய பிரமுகர்கள் வருகைதரவுள்ளனர். இந்தியாவிலிருந்து சபாநாயகர் தலைமையிலான குழுவினர் வருகின்றனர். இந்தியாவின் 33 மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கு வருகைதரவுள்ளமை முக்கிய அம்சமாகும்" - என்றார்.