இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செப்டம்பர் 21-ம் தேதி இந்தியாவுக்கு வர உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.அசோக மன்னரின் மகள் சங்கமித்ரா மூலம் புத்த மதம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பயணித்ததை எடுத்துரைக்கும் ஓவியத்தை டில்லியில் உள்ள இலங்கை தூதரகத்தில் சுஷ்மா நேற்று சனிக்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியது:
புத்தர் ஞானம் பெற்றதன் 2600-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில் புத்த மதம் தொடர்பான கல்வி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இம்மாதம் 21-ம் தேதி நடைபெறுகிறது.
100 ஏக்கரில் அமைய உள்ள இந்த மையம், உலகம் முழுவதும் உள்ள புத்த பிக்குகளுக்கு சேவை வழங்கும். இலங்கை அதிபர் ராஜபக்ச மற்றும் பூட்டான் பிரதமர் லியோன்போ ஜிக்மி தின்லே ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை வளர்ப்பதில் புத்த மதம் முக்கிய பங்கு வகிக்கிறது. புதிதாக அமையவுள்ள இந்த மையத்தின் மூலம் உறவு மேலும் வளரும் என்றார் சுஷ்மா.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், ராஜபசச டில்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுஷ்மா ஸ்வராஜின் நாடாளுமன்றத் தொகுதியான விதிஷா, சாஞ்சி அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.