வடக்கு,கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தினருக்கான வீடமைப்புக்கு சீனா 100 மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்துள்ளது.சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும், இராணுவ நலன்புரித் திட்டங்களுக்கே இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் நிதியுதவியுடன் வடக்கு,கிழக்கில் உள்ள சிறிலங்கா படைமுகாம்களில் வதிவிட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவுள்ளன.
அதேவேளை கொழும்பிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரியை நவீனமயப்படுத்துவதற்கு சீனா 1.5 மில்லியன் டொலரை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
சீனப்பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங்லி அடுத்த புதன்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக, சிறிலங்கா இராணுவத்துக்கான இந்த நிதியுதவிகளை சீனா அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கில் இருந்து சிறிலங்காப் படைகளை குறைக்க வேண்டும் என்று இந்தியாவும் ,மேற்குலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், கேந்திர முக்கியம்மிக்க இடங்களில் படைமுகாம்கள் அவசியம் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகிறது.
அதுவேளை, சீனாவிடம் இருந்து ஆறு எம்ஏ-60 விமானங்களை 105.4 மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்யும் உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் கையெழுத்திட்டுள்ளது.
எனினும் இந்த பேரம் இன்னமும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.